விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
'தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகத் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்ப, படம் குறித்து பேசிய கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வி.டி.சதீசன், இப்படத்தில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் எனத் தெரிவித்தார்.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் கட்டப்பட்டிருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. சங்பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நிசாம் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் நீதிபதிகள், “வெறுப்பு பேச்சுகளில் பல வகைகள் உள்ளன. இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கை குழு அனுமதி அளித்து சான்றிதழ் வழங்கியுள்ளது” என்று தெரிவித்தனர். மேலும் நீதிபதி பி.வி.நாகரத்னா, “மனுதாரர் முதலில் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும்” என்றார். அதற்கு மனுதாரரான நிசாம் பாஷா, வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகவுள்ளதால் நேரமின்மை காரணமாக உச்சநீதிமன்றம் வந்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மனு நிராகரிக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு உளவுத்துறை கேரளாவிற்கு இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என தெரிவித்து இப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை செய்தது.
இந்நிலையில் இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என கோரிய மற்றொரு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, இப்படத்தை இந்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.