கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் படுக்கையின்மை மற்றும் போதிய ஆக்சிஜனின்மை உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ளன.
இந்த நிலையில், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கேரள போலீசார் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி, மாபெரும் வரவேற்பு பெற்ற ‘என்ஜாய் எஞ்சாமி...’ பாடலை கரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி, மாஸ்க் அணிந்து கேரள போலீசார் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, கேரள போலீசாருக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.