
கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது இந்தியில் பேபி ஜான் படத்தில் கதாநாயகியாகவும் தமிழில் கண்ணி வெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். இதில் பேபி ஜான், அடுத்த மாதம் கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சமீப காலமாக கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கிறது. ஆனால், அந்த தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் நேரடியாக எந்த பதிலும் அளித்ததில்லை. கடந்த ஆண்டு துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத்துடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர, அவரைத்தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நண்பர் என திருமண தகவலுக்கு கீர்த்தி சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 11ஆம் தேதி அவரது நீண்ட கால காதலராக பேசப்படும் ஆண்டனி தட்டில் என்பவரை கரம் பிடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கோவாவில் நடப்பதாக சொல்லப்படும் இந்த திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.