Skip to main content

கவிதாலயா நிறுவனத்தின் புதிய திட்டம்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பிறந்த நாள் விழா 'ஒரே ஒரு பாலச்சந்தர்' என்ற பெயரில் கடந்த 10 ஜூலை அன்று சென்னையில் கே.பாலச்சந்தர் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் நாசர், இயக்குனர்கள் வசந்த், சரண், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பாலச்சந்தரின் நண்பர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். 

 

pushpa kandasamy

 

நிகழ்ச்சியின் போது, பாலச்சந்தரின் மகளும் கவிதாலயா நிறுவனத்தின் பொறுப்பாளருமான புஷ்பா கந்தசாமி, கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். "என் தந்தை பாலச்சந்தர், எப்பொழுதும் எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பார், செயல்படுவார். அதனால்தான் சினிமா உலகம் செழிப்பாக இருக்கும்போதே, அங்கு அவர் முழுவீச்சில் படங்கள் இயக்கியபோதே, தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்கினார். அப்பொழுதே அவர் சொன்னார், "எதிர்காலத்தில் டிவிதான் ஆளப்போகிறது" என்று. அதுபோலவே தொலைக்காட்சி ஊடகம் விஸ்வரூபம் எடுத்தது. அவரது வழியிலேயே எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கவிதாலயா தன் புதிய அவதாரத்தை எடுக்கிறது. எங்கள் நிறுவனம் டிஜிட்டல் மீடியாவில் இறங்கவிருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் எங்கள் முதல் டிஜிட்டல் படைப்பு அமேசான் ப்ரைமில் வெளிவர இருக்கிறது" என்றார்.

 

balachandar with rajini kamal

 

இயக்குனர் கரு.பழனியப்பன், "பாலச்சந்தர் அவர்களின் நினைவைப் போற்றுவது என்பது அவர் செய்ததை தொடர்வதுதான். ஒரே நேரத்தில் ஒரு ஹீரோயிச மாஸ் படமும் இயக்குனரின் படமாக ஒன்றையும் தயாரிப்பது அவரது பாணி. எனவே கவிதாலயா நிறுவனம் அது போலவே தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே புஷ்பா கந்தசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். "கவிதாலயாவின் டிஜிட்டல் படைப்பை அறிமுகம் செய்ய தனி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இப்போது கரு.பழனியப்பன் அன்புடன் கேட்டுவிட்டதால், இதை இங்கே அறிவிக்கிறோம்" என்றார்.          

 

 

தமிழ் சினிமாவில் நூறு படங்களுக்கு மேல் இயக்கி வெற்றிகரமாகவும் பல புதுமைகளை செய்தவராகவும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பெரிய ஆளுமைகளை வடித்தவராகவும் திகழ்ந்த பாலச்சந்தர், டிவியின் ஆரம்ப கட்டத்திலேயே அதிலும் இறங்கி பல சூப்பர்ஹிட் தொடர்களைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.         

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.