ADVERTISEMENT

“ஆரியம் ஒன்றை எதிர்க்கும், முடியாவிட்டால் தனதாக்கிக் கொள்ளும்” - கருணாஸ் காட்டம் 

11:09 AM Oct 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு அதரவாக நடிகர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வெற்றிமாறனின் கருத்து மிக உண்மையானது, சரியானது. ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. ராஜராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம். இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.

அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள். ராஜராஜன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு. ஆனால் ராஜராஜ சோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்வது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது. காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில்.. “நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை, இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்” அந்தப் ”பிழைத்துக் கொண்டோம்” என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.

ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும். அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழனை இந்து என்று மாற்ற நினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளி நாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். முப்பால் யாத்த வள்ளுவப் பெருந்தகைக்கு காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்ற முற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும். வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச் சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வு அடைய வேண்டும்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை, இப்படி பல்வேறு தளங்களில் இந்தி – சமஸ்கிருத – காவி அடையாளங்களாக மாற்றுவதற்கான ஆரிய நுண்ணரசியல் பலகாலம் தொட்டு நடந்தேறுகிறது. அது அண்மைக்காலமாக வேகமெடுத்துள்ளது. அதை நாம் முறியடிக்க வேண்டும். அதன் ஒரு பாதை தான்.. ஆர்.எஸ்.எஸ். பேரணி.. இதற்கு முன் வேல்யாத்திரை, ராமராஜ்ய ரத யாத்திரை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்தது. இந்தியாவை 'பாரத்', 'பாரத் வர்ஷா” என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பா.ஜ.க.முன்னெடுக்கிறது.. மிக விரைவில் இந்தியா பாரத் ஆக மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பதும் அவர்கள் மனுதர்மபடிதான் நடக்கும்.

ஆகவே நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். கலை மக்களுக்கானது, கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரிய. அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால், தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT