கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடித்து முடித்த கையோடு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, யோகி பாபு, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாகின. அதில் ஒரு புகைப்படத்தில் பழைய காவல் நிலையம்போல வண்ணம் தீட்டப்பட்டு, மேலும் அதில் மணியாச்சி காவல் நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் லேசான சலசலப்பு இந்த படம் குறித்து உருவாக தொடங்கியது.
1991ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் நடைபெற்ற கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகுவதாக தகவல் பரவியது. ஆனால், தற்போதுவரை படக்குழு இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் நடத்தி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் 'கர்ணன்' படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இது போன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்த திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.