தாமரைச்செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, முனிஸ்காந்த், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள நதி திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் கரு.பழனியப்பன் பேசுகையில், “இந்த நிகழ்வில் பேசிய அனைவரும் எங்களுக்குத் தாமரையை ரொம்பவும் பிடிக்கும் என்றார்கள். எனக்கும் தாமரையை பிடிக்கும். தாமரை என்ற பெயர் கொண்ட ஒருவர், பிறர் மனம் நோகாமல், எல்லோருக்குமான இடம் கொடுத்து, எல்லோருடைய கருத்தையும் கேட்டு, எல்லோரும் இணைந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கதை கேட்டு நான் நடிக்கிறேன் என்று சொன்னதும் இந்தக் கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவா இருக்கும், உங்களுக்கு ஓகேவா என்று கேட்டார். நல்லவனாக நடிப்பதைவிட கெட்டவனாக நடிக்கவே நான் விரும்புகிறேன். நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும்போதுதான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நல்லவனாக நடிக்கும்போது பேசினால் ரொம்ப அட்வைஸ் பண்றாண்டா என்று மூன்று படங்களிலேயே போரடித்துவிடும். அறிமுக இயக்குநராக இருந்தாலும் எந்தக் குழப்பமும் இல்லாமல் இந்தப் படத்தைத் தாமரை எடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஆனந்திக்கு பாராட்டுகள். படம் தொடங்கியதிலிருந்து முடியும்வரை பிரமாதமாக நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து படம் நடிக்க வேண்டும். நடிகர் சாம் ஜோன்ஸுக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் பெருவெற்றி பெறுமா என்று தெரியவில்லை, பெற்றால் மகிழ்ச்சி. அதேநேரத்தில் படத்தில் நடித்த அனைவரும் பாராட்டு பெறுவார்கள், கவனிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.