Skip to main content

“இப்போதும் சுதந்திரத்திற்கு போராடுகிறோம்” - கார்த்திக்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
karthick about election 2024

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் கார்த்தி அ.தி.மு.க மதுரை வேட்பாளர் சரவணனை, ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் மனநிலை விலை கொடுத்து வாங்க முடியாது. இது என்னுடைய ஆழமான நம்பிக்கை. அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஜெயித்தால், அது ரொம்ப நாளைக்கு நிற்காது. பணம் மட்டும் இருந்தால் போதாது. மனம் இருக்க வேண்டும். புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” என்றார். 

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “விஜய் சரியான வயதில் வருகிறார். அது ஆரோக்கியமான விஷயம். வரட்டும். ஒரு அண்ணனாக என்னுடைய ஆசை, அவர் சினிமாவிலும் நடிக்க வேண்டும். ஏனென்றால் அது தேவை. சில விஷயங்கள் திரையில் சொல்லும் போது அது நிறைய மக்களிடம் சேரும்” என்றார்.  

தொடர்ந்து பேசிய அவர், “சுதந்திரப் போராட்டத்திற்கு அப்புறம், ஏன் தலைவர்களின் தரம் குறைகிறதென மக்கள் கேட்கும் போது, அதை நான் ஏற்பதில்லை. தரம் குறையவில்லை. புத்திசாலிகள் இருக்கிறார்கள், விஞ்ஞானம் வளர்ச்சியடைந்திருக்கிறது. தேசப்பற்று அதிகம் இருந்தது. அப்போது நாமலும் பிறந்திருந்தால் சுதந்திரத்திற்கு போராடியிருப்போம். இப்போது இன்னொரு மாதிரி சுதந்திரத்திற்கு போராடுகிறோம்” என்றார். 

பா.ஜ.க மூத்த தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவது குறித்த கேள்விக்கு, “வரட்டும். எல்லாம் இந்தியர்கள் தான். அதற்கு உரிமை இருக்கு. வெள்ளையனே வெளியேறு என சொல்லியாச்சு. இங்க இந்தியர்களே மனம் மாறுங்கள் என்று தான் சொல்ல முடியும். வரக்கூடாது என சொல்ல முடியாது. அவர்கள் போக்கு சரி இல்லை என்றால் மக்கள் மாத்திடுவார்கள். ஒரே கட்சி மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தால் அது பழசாகி தான் போகும். இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி. ஏற்றத்தாழ்வுகள் மட்டும் தான் மனிதனின் ஜாதி. அந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நாம பார்த்துக்க வேண்டும். அது தான் ஆட்சி. ஆட்சி பூஜ்ஜியமாக இருக்கிறதா அல்லது ராஜ்ஜியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.            

என்னுடைய மூத்த சகோதரர் விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன், தந்தை வழியே அரசியலுக்கு வருகிறார். வரவேற்போம். சரத்குமாரும் என் நண்பர் தான். அவருடைய துணைவியார் நிற்கிறார். யார் வர வேண்டும் என மக்கள் முடிவு பண்ணட்டும். சினிமாவில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கின்றனர். அது எனக்கு வருத்தம்” என்றார். 

சார்ந்த செய்திகள்