
விவசாயிகளுக்கு துணை நின்று நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களைக் கெளரவப்படுத்தவும் நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உழவன் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருது 2022' விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் கார்த்தி, சூர்யா, சிவகுமார், உழவர் ஃபவுண்டேஷனின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களான மண்ணியல் உயிரியலாளர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், "உணவுத்துறை மட்டும்தான் அனைவரோடும் தொடர்புடைய ஒரு துறை. இங்கு நுகர்வோராக உள்ள நம்முடைய சிந்தனை மாறினால் விவசாயம் மாறும். நமக்கு என்ன வேண்டும் என்பதை நாம்தான் கேட்க வேண்டும். நான் ஆலிவ் ஆயில் சாப்பிடமாட்டேன், எங்க ஊர் நல்லெண்ணெய் சாப்பிடுகிறேன் என்று முடிவெடுத்தால் அதில் முக்கியமான ஒரு மாற்றம் இருக்கிறது. எனவே நுகர்வோரை விவசாயம் நோக்கி கொண்டுசெல்வதுதான் இந்த உழவன் அமைப்பின் நோக்கம்.
நாங்கள் நிறைய பேரிடம் பேசியதில் இருந்து ஆள் பற்றாக்குறை என்ற விஷயம் இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தெரிகிறது. அதற்கு ஒரே தீர்வு கருவிகள்தான். இன்ஜினியர்ஸ்க்கு பஞ்சமே இல்லாத இந்த ஊரில் இன்ஜினியர்ஸ் நினைத்தால் இங்குள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கமுடியும். மனித உழைப்பை உறிஞ்சாமல் விவசாயம் செய்ய கருவிகள் அவசியமானதாக உள்ளது. இங்கு நிறைய கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும் பெரிய விவசாயிகளுக்குத்தான் அவை பயன்படுகிறதே ஒழிய சிறு விவசாயிகளுக்கு அல்ல. சிறு விவசாயிகளுக்கான கருவிகள் வடிவமைப்பைத்தான் உழவன் பவுண்டேசனின் அடுத்த கட்ட நகர்வாக எடுத்துச் செல்ல இருக்கிறோம். அதற்காக கருவிகள் வடிவமைப்பு போட்டியையும் நடத்த இருக்கிறோம்" எனப் பேசினார்.