Skip to main content

"அந்த பயத்தால் தான் இரண்டு வருஷமா வெளியில் வாங்குவதில்லை" - கார்த்தி பேச்சு

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

karthi speech at sardar success meet

 

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர் . இதில் கார்த்தி, இயக்குநர் மித்ரன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

அப்போது கார்த்தி பேசுகையில், "என்னிடம் ஒருவர் சந்தோஷமாக இருக்கிறீர்களா எனக் கேட்டார். நான் நிம்மதியா இருக்கேன் என்றேன். ஏனென்றால் கடின உழைப்பை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறோம். ஒரு குழுவாக அனைவரும் சேர்ந்து உழைக்கிற ஒரு சந்தோஷம் மறுபடி மறுபடி கிடைத்தது பெரிய விஷயமாக பார்க்கிறேன். ஒரு குழுவாக இருப்பது ரொம்ப முக்கியமாக இருக்கிறது. அப்படி குழுவாக இருக்கும்பட்சத்தில் தான் அனைவரும் ஒரு ப்ராஜெக்ட்டிற்காக வேலை செய்வோம். 

 

இதனை பொன்னியின் செல்வன் படத்திலும் பார்த்தேன். மறுபடியும் சர்தார் படத்திலும் அதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தை கொடுத்ததற்கு மித்ரன் மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி. இந்தக் கதையைச் சொல்லி சம்மதிக்க வைப்பதும் இதிலிருந்த ஒவ்வொரு விஷயத்தை உருவாக்குவதும் அவ்வளவு ஈசி கிடையாது.  அதை நாம் ஈசியாக சொல்லிவிடலாம். ஆனால் எடுப்பது மிக கடினம். அதை மெனக்கெடல்களுடன் படக்குழு உருவாக்கியுள்ளார்கள்.

 

இந்தப் படத்திற்காக எல்லாரும் தங்களை மெருகேற்றிக் கொண்டோம். இந்த கதைக்களம் அதனை ஏற்படுத்தித் தந்தது. சர்தார் கதாபாத்திரம் நடிக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கும். தியாகம் என்ற வார்த்தை சமீபத்திய படத்தில் நான் கேள்விப்பட்ட மாதிரி எனக்கு நியாபகம் இல்லை. ஒரு நாட்டிற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார்கள். அதனை மனதில் புரிந்து கொண்டு உள்வாங்கி நடித்தது சுவாரசியமாக இருந்தது. 

 

இங்கு நிறைய மனநிலை கொண்ட மக்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கருத்தில் கொண்டு படம் எடுக்கிறோம். நல்ல அறிவாளியாக இருக்கும் ரசிகர்களுக்கு மட்டும் சினிமா எடுப்பதில்லை. எல்லாருக்காகவும் எடுக்கிறோம். அதனால் அனைவருக்கும் புரியும்படி சினிமா எடுக்க வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது. இது இந்தப் படத்திற்கு பெரிய சவாலாக இருந்தது. அதனை அழகாக செய்த படக்குழுவுக்கு நன்றி. 

 

என் கதாபாத்திரத்திற்கு 3 மணிநேரம் மேக்கப் போடப்பட்டது. ரொம்ப எரியும். கொஞ்சம் கோபமாகவும் இருக்கும். அப்போதெல்லாம், எனக்குள் நானே, நமக்கு முன்னாள் இதை விட பெரிய கஷ்டத்தை நிறைய ஜாம்பவான்கள் அனுபவித்துள்ளார்கள். அதனால் ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம் என சமாதானம் செய்து கொள்வேன். இன்றைய தலைமுறையினர், ஸ்பை திரைப்படம் என்றாலே பிரபல ஹாலிவுட் தொடர்கள் மற்றும் படங்களுடன் ஒப்பிடுவார்கள் என தெரியும். அதனால் எங்களால் முடிந்த அளவு முழு உழைப்போடு இந்த படத்தில் செய்திருக்கிறோம். 

 

படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை விட மரியாதை மற்றும் கைதட்டலுக்காகத்தான் ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். படத்தில் வரும் அந்த பாட்டில் திறக்கும் காட்சி எல்லோருக்கும் பயத்தைக் கொடுக்கும். அந்த பயத்தில் தான் இரண்டு வருஷமா 10 லிட்டர் கேன் வாங்கி வீட்டிலிருந்து நானே தண்ணீர் எடுத்துட்டு போயிட்டு இருக்கேன். முடிந்த அளவு வெளியில் தண்ணீர் வாங்குவதில்லை. சௌகரியத்தை நோக்கிப் போன நாம மறுபடியும் பழைய ஸ்டைலுக்கு மாறுவது ரொம்ப அவசியமாக நாங்கள் கருதுகிறோம். உங்களுக்கும் அது புரியும் என நினைக்கிறேன்" என்றார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.