விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ் மித்ரன். முதல் படத்திலே இணைய குற்றங்கள் குறித்து மிக சுவாரஸ்யமாக கதையமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து 'ஹீரோ' படத்தை இயக்கினார். முந்தைய படத்தை போலவே இந்த படத்திலும் இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் கல்வியில் நடக்கும் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களை பற்றி பேசினார். அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பி.எஸ் மித்ரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. பி.எஸ் மித்ரன், ஆஷாமீரா ஐயப்பன் என்ற சினிமா பத்திரிக்கையாளரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.