karthi about manobala, kajendran, mayilsamy

Advertisment

நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த திரை பிரபலங்கள் கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோருக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி. தியாகராயா மகாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், நடிகை தேவையானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஃபெப்சி, இயக்குநர் சங்கம் மற்றும் சின்னத்திரை சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி பேசுகையில், "3 பேருமே பேசுறதுக்கு முன்பே மக்களை மகிழ்விப்பவர்கள். அவர்களை பார்த்தாலே நாம சிரிச்சிடுவோம். அந்தளவுக்கு பார்த்தவுடனே சந்தோஷப்படுத்திடுவாங்க. கஜேந்திரன் சார் எப்பவுமே சந்தோஷமாக இருப்பார். ரொம்ப சப்போர்ட்டா இருப்பார். அவரை பற்றி தெரிஞ்சிக்கணும்னு தேடும் போது தான் கிட்டத்தட்ட 15 படங்கள் இயங்கியிருக்கிறார். 100 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார் என்பது தெரியவந்தது. ரொம்ப பாசிட்டிவா இருக்கிற நபர். பெரிய ஆளுமை உள்ள ஒருவர். அவர் மறைவார் என்று நினச்சு கூட பார்க்கவில்லை. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது கூட எங்களுக்கு தெரியாமல் இருந்தது.

மயில்சாமி சார், சிறுத்தை படத்திலிருந்தே பழக்கம். தனக்கு மிஞ்சினது தான் தானம் என்று சொல்வார்கள். அவரை பொறுத்தவரை தானத்துக்கு மிஞ்சினது தான் தனக்கு... என்று இருந்த ஒரு நபர். கடன் வாங்கி தானம் செய்கிற ஒரு நபரை நான் கேள்விப் பட்டதில்லை. அப்படி ஒருத்தர் அவர். சென்னை வெள்ளப்பெருக்கின் சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் விற்று மக்களுக்கு உணவளித்துள்ளார். குடும்பத்தை விட சமூகத்துக்காகத் தான் அதிகமாக வாழ்ந்துள்ளார். மற்றவர்களுக்கு உதவி கேட்கத்தயங்கமாட்டார். பலமுறை வேறொரு நபருக்காக என்னிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார். எம்.ஜி.ஆரை தலைவனாக ஏற்றுக்கொண்டு செயல்படக் கூடியவர். எம்.ஜி.ஆரை பற்றி நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார். அவர் மறைந்ததை ஏற்றுக்கொள்ள விடியவில்லை.

Advertisment

மனோபாலா சார் இப்போது இருந்திருந்தால் 'ஏண்டா இப்படி உட்காந்திருக்கீங்க... சிரிச்சு சந்தோஷமா இருங்கடா...' அப்படினு ஒரே நொடியிலே சிரிக்க வச்சிருப்பாரு. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், உணவு செலவை அவர் தான் பார்த்து கொள்வார். எந்த ஒரு தருணத்திலும் ஒரு பொறுப்பு கொடுக்கணும்னு நினைக்க மாட்டார். அவரே அதை எடுத்துக்கிட்டு செய்வார். எதாவது ஒரு சின்ன பிரச்சனை நடந்தாலும் அன்று இரவு ஃபோன் பண்ணி ஆறுதல் சொல்வார். வயசு வித்தியாசம் பார்க்காம ஈகோ இல்லாத மனிதர். அவருடைய நட்பு வட்டாரம் ரொம்ப பெருசு. பாரதிராஜா, கமல் என தொடங்கி பலரிடமும் தனிப்பட்ட முறையில் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்தவர். ஒரு அற்புதமான மனிதர்.

இவர்களின் 3 பேருடைய இழப்பு மிக பெரிய இழப்பு, வருத்தம். உண்மையா நாங்க ரொம்ப மிஸ் பண்றோம். அவர்களின் குடும்பத்துடன் நிச்சயமாக பயணிப்போம். அவர்களோடு நிற்போம்" என்றார்.