
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தக் லைஃப்’ படம் இன்று(05.06.2025) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. கமல் பேசிய மொழி விவகாரம் தொடர்பாக தொடர் எதிர்ப்பு அங்கு நீடித்து வரும் நிலையில் படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது. மேலும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனால் அதன் பிறகே கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து தெரிய வரும்.
இந்த சூழலில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியான தக் லைஃப் படத்தை கமல் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். திரையரங்க வளாகத்திற்குள் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்தும் பட வெளியீட்டை கொண்டாடினர். இவர்களோடு சிம்பு ரசிகர்களும் பேனர் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் முதல் காட்சி, காலை 9 மணிக்கு தொடங்கியது. இது சிறப்பு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிக்கு, ரசிகர்கள் அதிகாலை முதலே பல்வேறு திரையரங்குகளில் கூடி மேளதாளத்துடன் ஆட்டம் ஆடி படத்தை கொண்டாட்டமாக வரவேற்றனர்.
கர்நாடகாவில் படம் வெளியாகாததால் அங்குள்ள சில கமல் ரசிகர்கள் தற்போது தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் ஓசூர் வந்து ஒரு திரையரங்கில் படம் பார்த்து ரசித்தனர். அதற்கு முன்னாடி தமிழ்நாட்டு ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.