'தென்மேற்கு பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல விருதுகளையும் வென்றிருக்கின்றன. சமீபத்தில் இவர் இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.

kanne kalaimane

Advertisment

சீனு ராமசாமியின் படங்கள் நேர்மறை எண்ணங்களையும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் ஊட்டுபவை. உறவுகளின் சிக்கல்களையும் சிக்கல்களை தாண்டிய முக்கியத்துவத்தையும் இவரது படங்களும் பாடல்களும் பேசியிருக்கின்றன. இவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இடம்பெற்ற 'கள்ளிக்காட்டில் பொறந்த தாயே' பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது பெற்றார். அதன் பிறகு 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம்' பாடலுக்காக மீண்டும் தேசிய விருது பெற்றார் வைரமுத்து. முதல் பாடல் புழுதி பறக்கும் கிராமத்து கள்ளிக்காட்டு தாயின் பாசத்தை பாடியது. இரண்டாவது பாடல் திசை மாறிப் போன நல்ல நெஞ்சத்துக்கு நம்பிக்கை ஊட்டியது. 'கண்ணே கலைமானே' படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

Advertisment

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்தை இயக்கி வருகிறார் சீனு. இந்தப் படத்துக்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இயக்குனர் சீனுராமசாமியும் அதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அப்படி நிகழ்ந்து, அந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதினால், அது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வாக அமையும்.

இந்நிலையில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் மும்பையில் நடக்கும் தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளது. இது தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.