Skip to main content

கண்ணதாசன் குற்றாலம் போன கதை... - வைரமுத்து பகிர்ந்த சுவையான நினைவுகள்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

நேற்று (13 ஜூலை) கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள். இதை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது பல சுவாரசியமான நிகழ்வுகளை, நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பிற முன்னணி பாடலாசிரியர்களுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார்...

 

vairamuthu speech



"எனக்கும் என்னைவிட சிறந்தவர்களான மூத்த கவிஞர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நான் இந்த மேடையில்தான் சொல்கிறேன். இதை மனுஷ்யபுத்திரன் அறிவார். கோடம்பாக்கத்துக்கு இரண்டு மாதங்கள் வராமல் இருந்த கவிஞர்கள் உண்டு. ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் ஆண்டுக்கணக்கில் இடைவெளி விட்ட கவிஞர்கள் உண்டு.

 

 


'மணப்பாறை மாடுகட்டி' எழுதிய, உத்தமபுத்திரனில் 'முல்லை மலர் மேலே' எழுதிய, 'தாய்க்குப் பின் தார'த்தில் 'மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே' என்ற பாட்டை எழுதிய.. மக்களைப் பெற்ற மகராசி எழுதியவர் மருதகாசி என்ற மகத்தான கவிஞர். இத்தகைய கவிஞர், திரைத்துறையில் தனக்கு வாய்ப்பில்லை என்று கும்பகோணம் சென்று விவசாயம் செய்தார். இரண்டு ஆண்டுகள் சென்னை வரவேயில்லை. பின்னர், தேவர் அவரை அழைத்து வந்து பாட்டெழுதச் சொன்னார். இப்படியெல்லாம் நிகழ்ந்ததுண்டு.

 

 

kannadasan



கண்ணதாசன் குற்றாலத்துக்குப் போவார். இவர் கிளம்பும்போது அங்கு அருவியில் தண்ணீர் வந்திருக்காது. ஆனால், அங்கு இருக்கும்போது அருவியில் தண்ணீர் வரத் துவங்கினால் உடனே அங்கேயே தங்குவார். ஒரு மாதம் தண்ணீர் வந்தால், 'ஒரு மாசம் நான் இங்கதான் தங்குறேன்... தினமும் குளியல், தினமும் எண்ணெய் தேச்சுவிடு, தினமும் கோழிக் குழம்பு, தினமும் கோழிக் குழம்புக்குப் பக்கத்துல ஒன்னு இருக்குமே அது' அப்படி சுதந்திரமா இருப்பார். ஒரு மாதம், மேலே ஆகாயம்... கீழே பூமி... நடுவில் கண்ணதாசன்னு சுதந்திரமா இருப்பார்.

 

vaali mgr



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாட்டு எழுதிட்டு, இடையில ஊருக்குப் போய் விவசாயம் பண்ணிட்டு வந்து திரும்ப கொஞ்ச நாள் எழுதுவார். ஒரு முறை வாலியைப் பத்தி பாரதிராஜா சொன்னார், 'மூணு வருஷமா வாலியோட காரை நான் கோடம்பாக்கத்துல பாக்கவேயில்ல'னு. கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு, சகலகலா வல்லவன் படத்துக்கு பாட்டு எழுதித்தான் அவர் ரெண்டாவது ரௌண்டே வந்தாருன்னு சொல்வாங்க. அப்போதான் அவர் சம்பாரித்தார். எம்.ஜி.ஆர்க்கு பாட்டெழுதி சம்பாரிக்காதவர், 'நேத்து ராத்திரி அம்மா' எழுதித்தான் சம்பாரித்தார்.

 

 


எல்லோருக்கும் இடைவெளி உண்டு. அல்லது அவர்களே இடைவெளி விடுவார்கள். ஆனால், 1980ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் இன்று வரை நான் பாட்டு எழுதாத நாள் இல்லை. இதுதான் மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்".     

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.