Skip to main content

நாடாளுமன்ற செயலகத்திற்கு கங்கனா ரணாவத் கடிதம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

 

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் கங்கனா ரணாவத் நாடாளுமன்ற வளாகத்திற்குள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி நாடாளுமன்ற செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட சில காட்சியை நாடாளுமன்றத்தில் எடுக்கத் திட்டமிட்டு இந்தக் கடிதத்தை கங்கனா ரணாவத் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக, நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தவோ வீடியோ எடுக்கவோ தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. 

 

ஆனால் அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்றும் சன்சாத் டிவி பொதுவாக பார்லிமென்ட் நிகழ்வுகளைப் படமாக்க அனுமதிக்கப்படுவதாக கங்கனா ரணாவத் தரப்பு மேற்கோள் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனியார் பணிகளுக்காக நாடாளுமன்றத்திற்குள் படப்பிடிப்பு நடத்த இதற்கு முன் யாருக்கும் அனுமதி வழங்கியதில்லை. அதனால் கங்கனா ரணாவத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.