Skip to main content

'நான் தான் மணிகர்னிகா படத்தை இயக்கினேன்' - கங்கனா ரனாவத்   

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
kangana ranaut

 

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் "மணிகர்னிகா - ஜான்சியின் ராணி". ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட கங்கனா ரனாவத் படம் குறித்து பேசியபோது...

 

 

"தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார். தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன. அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது. காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது. ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது. அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல. அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

பங்கேற்ற கங்கனா; அழைக்கப்படாத குடியரசுத் தலைவர்! கேள்வி எழுப்பிய எம்.பி.

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Derek O. Brien on why Draupadi Murmu was not invited  new parliamentary session

 

திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில்  நடைபெற்றது. அப்போது 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர். 

 

இதனைத் தொடர்ந்து கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று (18 ஆம் தேதி) ஏற்கனவே அறிவித்தபடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது இதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தரும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

 

இந்த நிலையில் நேற்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பழைய கட்டிடத்திற்கு விடைகொடுத்துவிட்டு, ஒன்றாக புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றனர். இது தொடர்பான விழா துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கும் ஏன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கவில்லை என்ற கேள்வியை தற்போது எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர். 

 

ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காமல், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினர் என்பதாலேயே பாஜக தலைமையிலான மத்தியரசு அவருக்கு அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். இந்த நிலையில்தான் நேற்று பிரதமர், துணை குடியரசுதலைவர், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் நிகழ்வு நடந்தது. 

 

இந்த  நிகழ்விற்கு ஏன் குடியரசு தலைவர் அழைக்கப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓ.பிரைன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எங்கே இருந்தார்? ஏன் அவர் புறக்கணிக்கப்பட்டார்? அவர் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டாரா? எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டதையொட்டி கங்கனா, ஈஷா குப்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் புதிய நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.