கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். இந்த காலகட்டத்தில் ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.
இந்த சூழலில் கடந்த 20 ஆம் தேதி வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பின்பு ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கமல்ஹாசன், அவரது எக்ஸ் தள பக்கத்தில், "வி.கே பாண்டியன், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக உங்களின் நேர்மையான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய நிர்வாகத்திறன், உங்களின் குறிக்கோளான 'சிறப்பான ஆட்சிமுறை'க்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் திறமைவாய்ந்த தலைமைப்பண்பினாலும், மாநிலத்தை நிர்வகிக்கும் மிகவும் வலுவான அணியினாலும், ஒடிஷாமேலும் செழிக்கும், வளம்பெறும். 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிஷாவின் தலைவராக பதவியேற்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.