"அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு..." - ராணி எலிசபெத் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

kamalhassan tweet about queen elizabeth passed away

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். இதனிடையே ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே 1997ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த, கமல்ஹாசனின் மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் ராணி எலிசபெத் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN elizabeth
இதையும் படியுங்கள்
Subscribe