kamalhassan helped nadigar sangam members

தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த மாதம் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன், புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை இன்று (09.03.24) ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.