Advertisment

‘கொட்டுக்காளி’ குறித்து கமல்ஹாசன் எச்சரிக்கை

kamalhassan about sivakarthikeyan soori kottukkaali

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தைக் கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்க சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசியிருந்தனர். படத்தின் ட்ரைலரும் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தை கமல்ஹாசன் பாராட்டியுள்ளதாக சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கமல் வெளியிட்ட அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

அந்த அறிக்கையில் “கொட்டுக்காளி படத்தில் தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காகக் கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள். 'கொட்டுக்காளி டைட்டில் திரையில்.

Advertisment

கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல். வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு. பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி. உலகத்தைத் தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி. அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண். பாண்டிக்குத் தொண்டைக் கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்பக் கட்டமாகக்கூட இருக்கலாம். ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிதலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம்.

24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் 'எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு... பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன். வழிமொழிகிறது குடும்பம். போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் எனப் புரிந்துகொள்கிறோம். இது பேய்க் கதைதான். காதல் பேய்க் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை. ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், காலம் புரிந்துகொள்ளாவிடினும் மாறிவிட்டதை பிடித்துக் காட்டப்படுகிறது.

கடைசியில் இயக்குநர், பாண்டியனையும் நம்மையும் பகுத்தறிவின் கரையோரமாகவும் மனிதத்தின் விளிம்பிலும் நிறுத்திவிட்டு, தன்னுடைய கடமை முடிந்த சந்தோசத்தில் விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார். இந்தக் காதல் கதையின் முடிவை பாண்டியனைப் போலவே நாமும் உணர உந்தப்படுகிறோம். இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம். ஒரு சிலருக்கு எச்சரிக்கை. மொத்தத்தில் கொட்டுக்காளி குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை ஒன்று சொல்லியிருக்கிறார்கள். ஜெய் சினிமா” என்று குறிப்பிட்டுள்ளது.

ACTOR KAMAL HASSHAN actor sivakarthikeyan actor soori Kottukkaali P.S. Vinothraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe