1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வரலாற்று நிகழ்வை 83 என்று இயக்குனர் கபீர் கான் படமாக எடுக்கிறார். இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்க, ஸ்ரீகாந்தாக தமிழக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

kapil dev

Advertisment

Advertisment

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள், இயக்குனர் கபீர் கான், கபில்தேவ், ஸ்ரீகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தை தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அப்போது பேசிய கமல்ஹாசன் 1983ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசினார். அதில், “1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது மட்டுமே நமக்கு தெரியும். இயக்குநர் கபீர்கான் அதன் பின்னால் இருக்கும் அறியப்படாத கதைகள் குறித்துச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது. இங்கிலாந்தில் விளையாட சென்ற வீரர்கள் தங்களின் ஜெர்ஸியை தாங்களே தான் துவைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சலவைக்கு மிகவும் செலவாகும் என்பதால் இந்திய அணிக்கு அப்போது நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த ஜில் தண்ணீரில் துணியை துவைத்துவிட்டு, கிரிக்கெட்டும் விளையாடியிருக்கிறார்கள் நம்முடைய 83ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி.

எத்தனை கஷ்டங்களைத் தாண்டி உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்கள் என்ற கதையைக் கேட்டபோது சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ்' கதையை விட இது தான் உண்மையான சூப்பர் ஹீரோக்களின் கதை என தோன்றியது. இந்தப் படத்தை நிஜமாக்கிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.