Skip to main content

"காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன்" - கமல்ஹாசன் 

 

kamalhaasan tweet about gandhi on martyrs day

 

மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாளான இன்று பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்கி அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்க முடியாது, மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை வலுப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், "காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவு நாளில் வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் உரையாடல் மேற்கொண்ட கமல்ஹாசன், "இளவயதில் என் சூழல் காரணமாக காந்தியை மிகவும் விமர்சித்திருக்கிறேன். பின்பு எனது 24, 25 வயதில் காந்தியைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அவரது மிகப்பெரிய ரசிகனாகவே மாறிவிட்டேன். காந்தியிடம் மன்னிப்பு கேட்கும் விதமாகத்தான் ஹே ராம் படத்தை உருவாக்கினேன்" என கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.