நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு, தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் மேடை நிகழ்வுகளில் உடலில் வெள்ளை பெயிண்டை அடித்துக் கொண்டு ரோபோ போல் நடித்து காண்பித்து வந்ததால் ரோபோ சங்கர் என பெயர் பெற்றார். பின்பு சின்னதிரையில் நகைச்சுவை போட்டிகளில் மிமிக்ரி செய்து மக்களை கவர்ந்தார். பின்பு வெள்ளித்திரையிலும் தோன்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
ரவி மோகன் - எழில் கூட்டணியில் வெளியான தீபாவளி படம் மூலம் அறிமுகமானவர், பின்பு முன்னணி நடிகர்களான அஜித்துடன் விஸ்வாசம், தனுஷுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு படத்துக்காக உடல் எடையை குறைத்தார். அப்போது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்ததால் மேலும் அவரது உடல் எடை குறைந்தது. பின்பு சிகிச்சை பெற்று பழையபடி மீண்டு வந்தார். அடுத்து படங்களிலும் பிஸியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மறைந்துவிட்டார்.
ரோபா சங்கரின் மறைவிற்கு திரையுலகினர் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கரின் உடல் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தனுஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் கமல் தற்போது ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரை பார்த்ததும் ரோபோ சங்கரின் மகள் மற்றும் மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களை கமல் ஆறுதல் சொல்லி தேற்றினார்.
ரோபோ சங்கர், கமலின் தீவர் ரசிகர் ஆவார். கமலின் ஒவ்வொரு பட ரிலீஸுக்கும் திரையரங்கில் பேனர், கேக், மேளதாளம் என கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். கமலின் நற்பணி இயக்கத்திலும் பொறுப்பில் இருந்தார். ரோபோ சங்கருக்கு உடல் எடை குறைந்த சமயத்தில் கமல் போன் செய்து உடலை பாதுகாப்பாக பாத்துக்க சொல்லி அறிவுறுத்தியிருந்தார். ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பில் கமல் கலந்துகொண்டு வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.