Skip to main content

'அவரின் கையை பிடித்துக்கொண்டு கேட்டேன். அதுபோலவே அவர் செய்தார்' - மகேந்திரன் குறித்து கமல் உருக்கம் 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79. சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அஞ்சலி செலுத்திவிட்டு கமல்ஹாசன் பேசியபோது.....

 

kamal

 

"இயக்குனர் மகேந்திரனுடன் எனக்கு நீண்டநாள் நட்பு இருந்தது. படங்கள் நாங்கள் குறைவாக செய்திருந்தாலும், நட்பு வலுவாகவே இருந்தது. பக்கத்து ஊர் காரர். திறமையான மனிதர்களில் ஒருவர் என்று நான் வியந்தவர்களில் இவரும் ஒருவர்.  தங்கப்பதக்கம் படம் சமயத்திலுருந்தே எனக்கு தெரியும். முள்ளும் மலரும் படத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது. பாலு மகேந்திரா அவர்களையும், இவரையும் எங்கள் வீட்டில் சந்திக்க வைத்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. இருவரின் கையை பிடித்துக்கொண்டு வெற்றிப்படங்கள் கொடுங்கள் என்று சொன்னேன் அதுபோலவே அவர்கள் செய்தார்கள். அந்த படத்திற்கு மிகவும் கிட்டத்தட்ட புரொடக்ஷன் மேனஜர் அளவிற்கு கஷ்டப்பட்டு வேலைபார்த்தேன். ஒரு நல்ல படம் எக்காரணத்தை கொண்டும் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக அப்படி கடுமையாக உழைத்தோம். அந்த படம் தான் 'முள்ளும் மலரும்'. அதன் பிறகு தொடர்ச்சியாக நல்ல படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் மகேந்திரன். அவரை பார்த்து சினிமா எடுக்கவேண்டும் என்று ஒரு இளையக்கூட்டமே புறப்பட்டு வந்தது என்று சொன்னால் மிகையாகாது. அற்புதமான மனிதர். ஆரம்பத்தில் எளிமையாக இருந்தாலும் அவருடைய முடிவு உன்னதமான உச்சத்தை தொட்ட பிறகு தான் ஏற்பட்டிருக்கிறது என்பது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய செய்திருக்கலாம் மகேந்திரன் என்பதுதான் என் மனதில் இருக்கும் ஆதங்கம். மற்றபடி முழு வாழ்க்கை, நல்ல குடும்பம், அற்புதமான படைப்புகள், இவருடைய நினைவுகளை தமிழ் சினிமா என்றும் தாங்கி நிற்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேவர் மகன் பார்த்து திருந்திட்டோம்னு சொன்னாங்க’- சீமான் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

பூமணி, கிழக்கும் மேற்கும், மிட்டாமிராசு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். கருங்காலி படத்தை இயக்கி அதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மு.களஞ்சியம். தற்போது முந்திரிக்காடு என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜூ முருகன், சீமான், இயக்குனர் சசி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
 

seeman

 

 

இந்நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாரளருமான சீமான், கருத்தம்மா படத்தை பாரதிராஜா இயக்கும் சமயத்தில் அவருக்கு துணை இயக்குனராக சீமான் இருந்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசினார். 
 

“எங்க அப்பா பாரதிராஜா கிழக்குச் சீமையிலே படத்தை முடித்துவிட்டு கருத்தம்மா படத்தை எடுத்துகொண்டிருந்தார். இரவு நேரத்தில் படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரே கையில் அருவா, கம்புடன் ஓடிக்கொண்டிருந்தது. என்ன சத்தமா ஓடுராங்களே என்று திரும்பி பார்த்து அங்கிருந்த சில ஊர்க்காரர்களிடம் கேட்டால், ‘பக்கத்து ஊருடன் சாதிப் பிரச்சனை’என்றனர். 
 

அதேசமயத்தில் பெருசுகளும், சின்ன பையன்களும் நிறைய பேர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ‘ஏன் நீங்கள் எல்லாம் போகவில்லையா?’ என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். ‘இல்லைங்க முன்னாடி எல்லாம் இப்படி போயிட்டிருந்ததானுங்க, தேவர் மகன் படம் பார்த்த பிறகு டப்புனு அரிவாள் கம்பெல்லாம் எடுக்க அசிங்கமா இருக்குங்க’ என்றார்கள். 
 

பல வருடங்களாக ஒருவிஷயத்தை நமக்கு கற்பிச்சத ஒரு திரைக்கதை உடைச்சிடுச்சு. ஹையோ நான் கொடுத்த பாலெல்லாம் இரத்தமா ஓடுதேனு ஒரு ஆத்தா அழுகும்போது அந்த கண்ணீரில் கரைஞ்சுவிட்டது சாதி. அவர்கள் உணர்ந்துவிட்டார்கள், அங்க மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதை மாதிரி இந்தப் படமும் இளைய தலைமுறையினருக்கு சாதி என்ற நஞ்சை ஊட்டவிடாமல் தடுக்கும் ஒரு கேடயமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

 

 

Next Story

19 வருடங்கள் கழித்து பிரமாண்ட படத்திற்காக இணையும் கமல் - ரஹ்மான்...

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

விஸ்வரூபம் 2 படம் வெளியானதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சபாஷ் நாயுடு படத்தை எடுப்பதில் முதலில் பிஸியாக இருந்தார் பின்னர் அந்த படம் என்ன நிலையில் இருக்கிறது என்றுகூட யாருக்கும் தெரியவில்லை. 
 

kamal

 

 

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைவன் இருக்கிறான் என்ற படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் கனவு படமான மருதநாயகத்தை போல இதுவும் ஒரு கனவு படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவும் பேச்சுவார்த்தையுடனே முடிவடைந்தது. அரசியல் பிரவேசத்திற்கு பின்பு ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 வில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. பின்னர், ஷங்கர் இருக்கும் பிரச்சனையில் இந்த படமும் கைவிடப்பட்டுவிட்டது என்பது போன்ற செய்திகள் வருகின்றன.
 

இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏ.ஆர். ரஹ்மான் கமலுடன் இணைந்து பணிபுரிவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த பலரும் ஷாக்காகிவிட்டனர். இனி கமல் சினிமாவிற்கே வரமாட்டார் என்று எண்ணியவர்களுக்கு பெரும் வியப்பாக இந்த பதிவு இருந்தது. அந்த ட்வீட்டிற்கு கமல்ஹாசன் பதிலளித்து தகவலை உறுதி செய்தார். லைகா மற்றும் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் பிலிம்ஸ் இரண்டும் நிறுவனங்களும் இணைந்து தலைவன் இருக்கிறான் என்கிற மாபெரும் பிரமாண்ட படத்தை உருவாக்க இருக்கிறோம். அதில் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துகொண்டது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கமல் பெருமிதம் கொண்டார்.
 

கமல்ஹாசனும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இருவரும் இணைந்து கடைசியாக பணிபுரிந்த படம் 2000ல் வெளியான தெனாலி. 19 வருடங்கள் கழித்து இருவரும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.