
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி உருவாகிறது.

முன்னதாக மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் இப்படம் 'தேவர் மகன் 2' எனவும் சொல்லப்பட்டது. மகேஷ் நாராயணன் 'விஸ்வரூபம் 1 மற்றும் 2' படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில் மலையாளத்தில் அவர் இயக்கிய 'மாலிக்' படம் கமலுக்கு மிகவும் பிடித்ததாகவும் அதன் காரணமாக அவருடன் படம் பண்ண இணைந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்ட கமல், அதன் பின்னர் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இப்படம் ட்ராப் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகேஷ் நாராயணனும் கமல்ஹாசனும் சுமுகமாகப் பேசி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது போல் ட்ராப் செய்யப்பட்டதையும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் ஒரு படம் நடிக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.