திரைத்துறையில் உயர்ந்த விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் இறுதிசெய்யப்பட்ட நாமினேஷ் பட்டியல், பின்பு மார்ச்சில் விருது வழங்கும் விழா, அடுத்து விருது குழுவில் இணையும் புது உறுப்பினர்கள் குறித்த பட்டியல் என அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதனை விருது வழங்கும் குழுவான அகாடமி குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான நாமினேஷ் பட்டியல், விருது வழங்கு விழா முடிந்த நிலையில் தற்போது இந்தாண்டிற்கான புது உறுப்பினர்கள் சேர்ப்பது தொடர்பான பட்டியலை அகாடமி குழு வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறைக் கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் இந்தியத் திரைத்துறையில் மணிரத்னம், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், கீரவாணி உள்ளிட்ட சிலர் அவரவர் சம்பந்தப்பட்ட பிரிவில் இடம் பெற்றிருந்தனர். இதனையடுத்து இந்தாண்டிற்கான பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இவரை தவிர்த்து இந்தியத் திரையுலகை பிரதிபலிக்கும் வகையில் மொத்தம் 16 பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். உலகளவில் மொத்தம் 531 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, இயக்குநர் பாயல் கபாடியா, ஆவணப்பட இயக்குநர்கள் அருண் பட்டாராய் மற்றும் ஸ்மிருதி முந்த்ரா, கேஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, தயாரிப்பு நிர்வாகி ரவி அஹுஜா, புரொடைக்ஷன் மற்றும் டெக்னாலஜி துறையைச் சேர்ந்த சைதன்யா சின்ச்லிகர், மோமிதா சென்குப்தா மற்றும் முனிரா தயாப்ஜ் ஆகியோர் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் இருந்து ரவி பன்சல், அபிஷேக் நாயர், யுகந்தர் தம்மரெட்டி மற்றும் ஜதீன் தக்கர் ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஆஸ்கர் விருது வெல்ல போட்டியில் இருக்கும் படங்களுக்கு வாக்களிப்பர். இதுவரை தமிழ் திரையுலகில் சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம்ஆகியோர் இருக்கும் நிலையில் தற்போது கமல்ஹாசனும் இணையவுள்ளதாக தெரிகிறது. அகாடமி குழுவில் தற்போது உலகளாவிய உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 10,500 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்த நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம் உள்ளிட்ட படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது அனுப்பப்பட்டு விருது பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.