“நெஞ்சம் பதறுகிறது” - மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்த கமல்

kamal about wayanad landslide issue

கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டதிலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் இன்று( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் தொடர்ச்சியாக மீட்பு பணிக்குழு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது, தற்போது வரை இந்த இரு நிலச்சரிவுகளில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் இரு நிலச்சரிவுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பேரிடர் சம்பவத்திற்குத் தொடர்ச்சியாகப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலையும் மேலும் மீட்பு பணியை விரைந்து செயல்படுத்தக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், அவரது கட்சியின் எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான கமல்ஹாசன் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளப் பக்கத்தின் வாயிலாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN Makkal needhi maiam wayanad
இதையும் படியுங்கள்
Subscribe