“எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர்... கண்கள் ததும்புகின்றன” - கமல் உருக்கம்

377

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம் பெரும் நடிகையான சரோஜா தேவி(87) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். திரைத்துறையில் 6 தசாப்தங்களாக பயணித்து வந்த சரோஜா தேவி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சரோஜா தேவியின் உடல் பெங்களூரு, மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதி ஊர்வலம் புறப்பட்டு, மல்லேஸ்வரம் அருகே கொடிஹள்ளி தோட்டத்தில் அவரது கணவரின் கல்லறைக்கு அருகே இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. சரோஜா தேவி மறைவையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, “பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். சத்யராஜ், வீடியோ வாயிலாக முடிசூடா ராணி என புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி., தனது எக்ஸ் பக்கம் மூலம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. 

383

மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ACTOR KAMAL HASSHAN saroja devi
இதையும் படியுங்கள்
Subscribe