Skip to main content

தயாரிப்பாளர்களுக்காக கலைப்புலி தாணு எடுத்த அதிரடி முடிவு!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

தமிழ் சினிமாவில் எளிமையாகத் தன்னுடைய பயணத்தைத் தொடங்கி தற்போது மிகப்பெரிய தயரிப்பாளராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு, தன்னுடைய படங்களை பிரமாண்டமாக எடுப்பதிலும், அதை மிகவும் பிரமாண்டமாக விளம்பரப்படுத்துவதிலும் புகழ் பெற்றவர். இவரது தயாரிப்பில் உருவான 'கபாலி' படத்தின் விளம்பரங்கள் வானம் வரை பேசும்படியாக இருந்தன. ஆம், கபாலி படத்தின் போஸ்டரை விமானத்தில் வண்ணம் தீட்டி விளம்பரப்படுத்தினார். ஆளவந்தான், காக்க காக்க, துப்பாக்கி உள்பட  பல முக்கிய படங்களை தயாரித்த இவர் மிகப்பெரிய வெற்றிகளையும் கொடுத்துள்ளார். திரைப்பட தயாரிப்பிலும் தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகளிலும் பல முன்னெடுப்புகளை செய்தவர் தாணு.  

 

kalaipuli s thanu

 

 

தற்போது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்தை தயாரித்திருக்கிறார் கலைப்புலி தாணு. தனுஷை வைத்து மேலும் இரண்டு படங்களையும் தயாரிக்கிறார். 'அசுரன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய தாணு, தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர்கள் மகிழும் வண்ணம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 
 

“அசுரன் படத்தின் ஆடியோ ரைட்ஸ் குறித்து என்ன செய்யலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். வருடத்திற்கு 200இல் இருந்து 250 படங்கள் வெளியாகிறது. இதில் 20 படங்களின் ஆடியோதான் விலை போகிறது. மற்றதெல்லாம் வீணாகப் போகிறது. இதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து 'கலைப்புலி ஆடியோ' என நிறுவனம் ஒன்றை தொடங்கினேன். 'கானா' என்கிற ஒரு நிறுவனம் இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை மட்டும் சுமார் ஒரு கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் எத்தனை படங்களின் இசை விலை போகாமல், எத்தனை கோடிகள் வீணாப்போகிறது? ஒரு நிறுவனம் மட்டும் ஓடிடி ரைட்ஸுக்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார்கள் என்றால் இன்னும் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. மாரி-2வில் உள்ள ரௌடி பேபி யூ-ட்யூபில் வெளியாகி உலகளவில் சாதனை படைத்துள்ளது. அந்த ஒரு பாடலுக்கு மட்டும் இரண்டரை கோடி வசூலானதாக எனக்குத் தகவல் வந்தது. இந்தப் படத்திலும் அத்தனை பாட்டுகளும் பட்டி தொட்டி எங்கும் உயர உயரப் போகும். அந்த வசூலை எல்லாம் நாம் திரையுலகத்துக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் ஒரு இனிப்பான ஒரு செய்தி, கலைப்புலி ஆடியோ தயாரிப்பாளர்களுக்கானதுதான்” என்று திரைப்படங்களின் பாடல்களுக்கு உள்ள வியாபார வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
 

zombo


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினர்படங்கள் நஷ்டத்தை கொடுப்பதாகவே தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வாரா வாரம் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் நல்ல வசூல் கொடுத்த படங்களாக விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா 3, நேர்கொண்ட பார்வை உட்பட சில படங்களையே திரையுலகினரும் தியேட்டர் அதிபர்களும் குறிப்பிடுகின்றனர். இப்படி வசூல் கொடுத்த படங்களும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு லாபம் கொடுத்தவை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு, முக்கிய தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவின் இந்த அறிவிப்பும் முன்னெடுப்பும் லாபத்தை நோக்கிய ஒரு வழியை காட்டியுள்ளது என்று சொல்லலாம். 
 

முன்பே ஒரு மேடையில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே.' சதீஷ்குமார், தனது 'தங்கமீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை' பாடல், காலர் ட்யூன்களால் மட்டுமே ஒரு பெரும் தொகையை பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டார். இப்படி பாடல்கள் மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் இருப்பதாக முக்கிய தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளது நல்ல செய்தி. அதே நேரம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்களில், இளம் இயக்குனர்கள் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவது குறைந்திருக்கிறது. யதார்த்தத்துக்கு நெருக்கமாக படம் எடுக்கும் முயற்சியில் பாடல்களுக்குரிய இடம் சுருங்கி வருவதும் உண்மை.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“க்ளைமாக்ஸ் மிரட்டல்” - ஜி.வி பிரகாஷ் படத்திற்கு திரை பிரபலங்கள் பாராட்டு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
producer thanu praised gv prakash kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய் நுழைந்துவந்த அனுபவம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பாராதிராஜ மற்றும் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

producer thanu praised gv prakash kalvan movie

இந்த நிலையில் ரஜினி, கமல்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்வன், உள்ளம் கவர் கள்வன், பாரதிராஜாவும் , இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள், க்ளைமாக்ஸ் மிரட்டல், வெற்றி பெற வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.  
 

Next Story

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ - ஆளவந்தான் ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Aalavandhaan re release update

 

கமல்ஹாசன் கதை, மற்றும் திரைக்கதை எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த தேதிகளில் இரண்டு மொழிகளிலும் வெளியானது.

 

இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவின்டின் டரான்டினோ, "ஆளவந்தான் படத்தில் வரும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சி தான் எனது 'கில் பில்' படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்கு உத்வேகமாக அமைந்தது" என தன்னிடம் கூறியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்த மதுசூதனனுக்கு 49வது தேசிய விருது விழாவில் தேசிய விருது கொடுக்கப்பட்டது.

 

இப்படம் 22 வருடம் கழித்து ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கடந்த ஜனவரியில் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.