Skip to main content

“உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில் தான் இருந்திருக்கிறார்”- தயாரிப்பாளர் தாணு!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
kalaipuli s thanu

 

 

அண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். இது தமிழ் திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. தற்போது இதற்கு பலரிடம் இருந்தும் எதிர்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் நேற்று காலை ஒன்று கூடி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பில் பேசிய தாணு, “பல்வேறு சாதனை படைத்த தயாரிப்பாளர்கள் அனைவருமே 1,300 பேர் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் தற்போதைய காலத்தில் 50 - 100 பேர் வரைதான் படம் தயாரிப்பார்கள். மீதி அனைவருமே வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு, முன்பு படம் பண்ணினோம் இன்றைக்கு நாம் இந்த சூழலில் இருக்கிறோம். இந்த சங்கம் நமக்கு கொடையாக இருக்காதா என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அவர்களுக்கு இன்சூரன்ஸ் போட்டுக் கொடுத்து, அதன் மூலம் சுமார் 900 உறுப்பினர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். மாதம் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை சுமார் 200 பேருக்கு உதவியாக போய்க் கொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அனைவருக்கும் 5000 ரூபாய் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறோம். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தாய்வீட்டு சீதனம் என்று சந்தோஷப்படுகிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா இந்த மாதிரி தவறை சத்தியமாக செய்யவில்லை. ஏனென்றால் அவர் மனம்விட்டு என்னிடம் பேசியிருக்கிறார். ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு பாரதிராஜாவை சூழ்நிலை கைதி மாதிரி ஆக்கிவிட்டார்கள். உண்மையில் தனிப்பட்ட முறையில் மனவேதனையில்தான் இருந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். பல பேர் பல விதமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

நான் அவரிடம் பேசும் போது, அனைவரிடமும் கலந்து பேசி பண்ணுகிறேன் என்று சொல்லித்தான் அறிக்கை விடுத்தார். அடுத்த 2 நாட்களில் ஒரு கும்பல் அவரை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கி அறிக்கை கொடுத்துவிட்டது. இந்தவொரு பதட்டத்தில் தான் இருக்கிறோம்.

 

இந்தச் சங்கத்தில் தலைவராக இருக்கும்போது நல்லபடியாக நிர்வாகம் செய்துவிட்டு தான் வந்தேன். வரும் தலைமுறையினருக்கு வழிவிட்டுத்தான் சென்றேன். இப்பவும் சொல்றேன், இந்த சங்கத்தில் இந்தாண்டும் நான் தலைவராக நிற்க போகிறேன் என அறிவிக்கவில்லை. ஆனால், பாரதிராஜா வந்தார் என்றால் அவருடைய பதவிக்கு மட்டும் தேர்தல் வேண்டாம். மற்ற பொறுப்புகளுக்கு தேர்தல் வைத்து கொள்வோம் என்று தான் சொன்னேன்.

 

பாரதிராஜா என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ இந்த சங்கத்துக்கு செய்யட்டும். இதில் எந்தவொரு குறைபாடுமே கிடையாது. அவருடைய காலம் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடந்த 9 மாதங்களில் அவர் இல்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் என்னென்ன குழப்பம் எல்லாம் நடந்தது என்பது இங்குள்ள பைல்களை எடுத்து பார்த்தால் தெரியும். அப்படிப்பட்டவர்கள் இப்போது பாரதிராஜாவுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

 

தமிழுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோமோ, அந்தளவுக்கு திரையுலகில் பாரதிராஜாவுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்கள். எந்த காலத்திலும் அவரை கீழே இறக்கி பார்க்கவே மாட்டோம். உங்கள் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். யோசனை செய்யுங்கள். தயவு செய்து எந்த பிளவும் வேண்டாம்.

 

இந்த பிரச்சனையில் பாரதிராஜாவின் பெயரையே பயன்படுத்த வேண்டாம், அவர் ஒரு புனிதம். இந்த திரையுலகிற்கு ஒரு செழுமையான சூழலை உண்டாக்கி கொடுத்த ஒரு மகான். அனைவருக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில், இந்த தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்