Skip to main content

"கே.பி. சுந்தராம்பாளை அப்படியே விட்டா என் பெயரைக் கெடுத்திடுவா..." கிட்டப்பா பாகவதர் எடுத்த அதிரடி முடிவு!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கிட்டப்பா பாகவதருக்கும் கே.பி. சுந்தராம்பாளுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது எப்படி என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

“அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்து சிலோனுக்கும், சிலோனிலிருந்து இந்தியாவிற்கும் நினைத்த நேரத்திற்குச் சென்று வரலாம். விசா போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அந்தச் சமயத்தில் இலங்கையில் வள்ளி திருமண நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில், கிட்டப்பா பாகவதர் நடிக்க இருந்தார். அந்தக் காலத்தில் கிட்டப்பா பாகவதர் பாடி நடிக்கிறார் என்றால் மக்கள் கூட்டம் பெரிய அளவில் திரண்டு வரும். தென்காசியைச் சேர்ந்த அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த நாடகத்தைப் போட்டி நாடகமாகத் திட்டமிட்டிருந்தனர். வள்ளியைத் திருமணம் செய்துகொள்வதற்காக முருகன் வருகிறார். குறவர் வீட்டில் பிறந்த பெண்ணான வள்ளி, திருமணம் செய்தால் முருகனைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறார். வள்ளியை சோதிப்பதற்காக வேடன் வேடத்தில் முருகன் கிளம்பி வருகிறார். கையில் வில்லுடன் வந்த முருகனை வள்ளி நிறுத்துகிறார். ‘ஏன் எங்க இடத்திற்குள் வந்த’ என வள்ளி கேட்க, ‘எனக்கு சொந்தமான மான் ஒன்று இந்தப் பக்கம் ஓடிவந்துவிட்டது’ என முருகன் கூறுகிறார். அப்போது, 'காயாத கானகத்திலே... நின்று உலாவும் நற்காரிகையே...’ எனப் பாடல் தொடங்கும். அந்தப் பாடலுக்காகவே வள்ளி திருமணம் நாடகம் ஆயிரம் நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது. பின்பு, திரைப்படமாக வெளிவந்தபோதும் அந்தப் பாடலுக்காகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. பின்பு வள்ளி, ‘உன் மானுக்கு என்ன அடையாளம்’ எனக் கேட்பார். அதற்கு முருகன், 'மேயாத மான் புல் மேயாத மான்... சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் நிமிர்ந்து பாயாத மான்..." என்று கூறுவார். வந்திருப்பது முருகன் எனத் தெரியாமல் போடா வாடா என்று வள்ளி திட்டுவார். உடனே, அங்கிருந்து முருகன் கிளம்பிவிடுவார்.

 

பின், வயதான முதியவர் தோற்றத்தில் வருவார். மீண்டும் வள்ளியிடம் சென்று ‘எனக்குப் பசிக்குது ஏதாவது சாப்பிட கொடுக்க முடியுமா’ என்பார். வயதானவர் எனப் பரிதாபப்பட்டு தேனும் தினை மாவும் வள்ளி கொடுப்பார். அதை வாங்கிவிட்டு ‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிடட்டுமா’ என முருகன் கேட்பார். உடனே கடுப்பான வள்ளி, 'மோசக்கார வேஷம் கொண்ட மூடக்கிழவா போடா...' எனத் திட்டுவார். பதிலுக்கு, 'தாடி நரைத்தால் என்ன மீசை நரைத்தால் என்ன ஆசை நரைக்கலடி...' என முருகன் பாடுவார். இப்படி மாறிமாறி இருவரும் பாடுவார்கள். சிலோனில் நடந்த போட்டி நாடகத்தில் யார் இப்படி பாடி ஜெயிக்கிறார்களோ அவருக்கு ஒரு தங்க முலாம் பூசப்பட்ட கோப்பை பரிசு என அறிவித்தார்கள். பல பேர் கிட்டப்பா பாகவதருடன் போட்டிபோட்டு தோற்றுவிட்டார்கள். அந்தச் சமயத்திலேயே பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற உணர்வு மக்களிடம் இருந்தது. ஒரு பிராமணர் இங்குவந்து அனைவரையும் தோற்கடித்துவிடுகிறான். அவனைத் தோற்கடிக்க எதாவது தமிழ்ப்பொண்ணு கிடைக்காதா என மக்கள் தேட ஆரம்பிக்கின்றனர். தன்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் இவன் கர்வத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் என்று ஒருவர் இருக்கும் விஷயம் அவர்களுக்குத் தெரியவருகிறது. உடனே சிலோனில் இருந்து நிறைய பேர் கிளம்பிவருகிறார்கள்.

 

கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாளையும் அவரது அம்மாவையும் சந்தித்து விவரத்தைக் கூறுகிறார்கள். மேலும், கிட்டப்பா பாகவதரை போட்டியில் வென்றுவிட்டால் தங்கமுலாம் பூசிய கோப்பை பரிசாகக் கிடைக்கும். அதை விற்றால் ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை போகும் என்று கூறிவிட்டு கே.பி. சுந்தராம்பாளை அழைத்துச் செல்வதற்காக அட்வான்ஸ் தொகையையும் அவர் அம்மாவிடம் கொடுத்துள்ளனர். அழைத்துச் செல்வதற்காக வந்தவர்களுடன் கே.பி. சுந்தராம்பாளும் அவரது அம்மாவும் கிளம்பி சிலோனுக்குச் செல்கின்றனர். மறுநாள் நாடகம் தொடங்குகிறது. கிட்டப்பா பாகவதரும் கே.பி. சுந்தரம்பாளும் நடித்துக்கொண்டே மாறிமாறி பாட ஆரம்பிக்கின்றனர். போட்டி கடுமையாக இருக்கிறது. இப்படி இருவரும் மாறிமாறி பாடியதில் மறுநாள் பொழுதே விடிந்துவிட்டது. அந்தப் போட்டிக்குத் தலைமை தாங்கிய சேர்மன், இருவருமே வென்றதாக அறிவித்துவிடுகிறார். கோப்பை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

அதுவரை தன்னை எதிர்த்துப் பாடியவர்கள் அனைவரையும் தோற்கடித்துப் பழகிய கிட்டப்பா பாகவதருக்கு அன்றைய இரவு தூக்கம் வரவில்லை. வழக்கத்திற்கு மாறாக கிட்டப்பா பாகவதர் இருப்பதைக் கண்டு அவரிடம் உதவியாளர் காரணத்தைக் கேட்கிறார். இந்த தோல்வியை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறிய கிட்டப்பா பாகவதர், ‘இவளை இப்படியே விட்டால் ஊர் முழுவதும் என் பெயரைக் கெடுத்துவிடுவாள். அதனால் அவளை உடனடியாக நான் திருமணம் செய்ய வேண்டும். பொண்ணும் நல்லாத்தான் இருக்கா... அவங்க வீட்டுல பேசுங்க’ எனக் கூறியுள்ளார். உடனே கிட்டப்பா பாகவதரின் ஆட்கள் கே.பி. சுந்தராம்பாள் அம்மாவிடம் சென்று பெண் கேட்கிறார்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரை விட நான்குமடங்கு அதிகமான பெயரும் புகழுடன் இருந்தவர் கிட்டப்பா பாகவதர். அப்படிப்பட்ட ஒருவர் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறாரா என அவர் அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவர் திருமணத்திற்கு உடனே சம்மதித்துவிடுகிறார். அதன் பிறகு, கே.பி. சுந்தராம்பாளுக்கும் கிட்டப்பா பாகவதருக்கு திருமணம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.