Skip to main content

முன்னாள் காதலிக்கு அவள் அக்காவுடன் பிறந்த குழந்தையை திருமண பரிசாக அளித்த காதலன்

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஸ்ரீதர் இயக்கத்தில் 1959ஆம் ஆண்டு வெளியான கல்யாண பரிசு படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"கல்யாணப் பரிசு படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் ஜெமினி கணேசனும் சரோஜா தேவியும் காதலர்கள். சரோஜா தேவி வீட்டு மாடியிலேயே ஜெமினி கணேசன் குடியிருப்பார். 'வாடிக்கை மறந்திடுவேனோ...' எனப் பாட்டு பாடி கடற்கரையில் கட்டி உருண்டு இருவரும் காதல் செய்வார்கள். சரோஜா தேவியின் அக்கா விஜயகுமாரி வீட்டில் துணி தைத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமாகத்தான் தன்னுடைய தங்கை சரோஜா தேவியைப் படிக்க வைப்பார். குனிந்த தலை நிமிராமல் துணி தைத்துக்கொண்டே இருப்பார் விஜயகுமாரி.

 

அன்று ஒருநாள் மாடியிலிருந்து ஜெமினி கணேசன் இறங்கிவருகையில் தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்துவிடுகிறாள். ஜெமினி கணேசன் அந்த வீட்டிற்கு குடி வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அன்றுதான் முதன்முறையாக அவரைப் பார்த்தவள், அவர் அழகில் மெய் மறந்துவிடுகிறாள். அதில் அவளுக்குள் சிறு தடுமாற்றம் வந்துவிடுகிறது. உடனே தங்கை சரோஜா தேவியை அழைத்து அவனைப் பற்றி கேட்கிறாள். அவர் குடி வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதே அக்கா என்று அவர் கூற, இன்றுதான் நான் அவரைப் பார்க்கிறேன் எனக் கூறிவிட்டு அவர் பார்க்க அழகா இருக்கார்ல எனக் கூறுகிறாள். உடனே சரோஜா தேவி உனக்கு பிடிச்சிருக்கா அக்கா எனக் கேட்க, விஜயகுமாரி சிரிக்கிறாள். தங்கையும் அவரும் காதலிக்கும் விஷயம் இவளுக்குத் தெரியாது. 

 

மறுநாள் ஜெமினி கணேசனைக் கடற்கரையில் சந்திக்கிறார் சரோஜா தேவி. அவரிடம் நடந்த விஷயத்தை எடுத்துக்கூறி என்னுடைய அக்காவை கல்யாணம் செய்துகொள் என்கிறாள். உன்னை காதலித்துவிட்டு எப்படி உன் அக்காவை நான் திருமணம் செய்துகொள்ள முடியும் என அவர் மறுத்துவிடுகிறார். கஷ்டப்பட்டு துணி தைத்து அதில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக என்னை படிக்க வைக்கிறாள் என் அக்கா. இதுவரை என்னிடம் எதுவும் அவள் கேட்டதேயில்லை. முதல்முறையாக என்னிடம் ஒன்று கேட்டிருக்கிறாள் எனக் கூறி அவருக்கு அழுத்தம் கொடுக்க, அவர் முடியாது எனக் கூறிவிடுகிறார். அப்படியென்றால் நானும் உன்னை இனி காதலிக்கமாட்டேன் எனக் கூறிவிடுவார் சரோஜா தேவி. 

 

நாம் காதலிக்கவில்லை என்றால் எப்படியும் உன் வீட்டில் உனக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்துவைப்பார்களே... அது ஏன் என் அக்காவாக இருக்கக்கூடாது என்பார் சரோஜா தேவி. பின், விஜயகுமாரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்துவிடும். அக்காவிற்கு திருமணம் செய்துவைத்துவிட்டு அவர்களை ரயிலில் ஏற்றிவிட்டு தனியாக நடந்துவரும் போது 'காதலிலே தோல்வியுற்றாள்...' என்று ஒரு பாடல் வரும். பட்டுக்கோட்டை எழுதிய அந்தப் பாடல் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். பின், விஜயகுமாரி இறந்துவிடுவார். மனைவி இல்லாமல் குழந்தையை வளர்க்க சிரமப்பட்ட ஜெமினி கணேசன், குழந்தையை சரோஜா தேவியிடம் ஒப்படைக்கலாம் எனக் கிளம்பிவருவார். இங்கு வந்தால் சரோஜா தேவிக்கு கல்யாணம் நடந்துகொண்டிருக்கும். ஒரு காகிதத்தில் கல்யாண பரிசு என்று எழுதி, அதைக் குழந்தை கையில் கொடுத்து, மணமேடையில் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டி அதுதான் உன் அம்மா... அவரிடம் சென்று கொடு என்று குழந்தையை அனுப்பிவைப்பார். குழந்தை கொடுத்ததை வாங்கி சரோஜா தேவி படித்துப் பார்ப்பார். நிமிர்ந்து பார்த்தால் ஜெமினி கணேசன் தூரத்தில் நடந்துபோய்க்கொண்டு இருப்பார். அற்புதமான க்ளைமாக்ஸ் காட்சியாக அந்தக் காட்சி இருக்கும்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.