Skip to main content

அம்மா புகைப்படத்திற்கு முன்னால் நின்று தேவருக்கு எம்.ஜி.ஆர் பண்ணிக்கொடுத்த சத்தியம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

mgr

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நீண்டகாலம் நெருங்கிய நண்பர்களாக இருந்து சிறு மனஸ்தாபம் காரணமாக நட்பை முறித்துக்கொண்ட எம்.ஜி.ஆரும் சாண்டோ சின்னப்பதேவரும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எவ்வாறு இணைந்தனர் என்பது குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"எம்.ஜி.ஆர், குண்டுமணி என்பவரை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சில படங்களில்கூட அவரைப் பார்த்திருப்போம். அவரை நாடகங்களிலும் எம்.ஜி.ஆர் நடிக்க வைப்பார். ஒருமுறை கும்பகோணத்தில் நடந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரும் குண்டுமணியும் இணைந்து நடித்தனர். உடல் முழுவதும் எண்ணெய் தடவிக்கொண்டு எம்.ஜி.ஆருடன் குண்டுமணி சண்டையிடுவது மாதிரியான காட்சியில், குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி அந்தப் பக்கத்தில் எறிவதுபோல எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும். அந்தக் காட்சிக்காக குண்டுமணியை எம்.ஜி.ஆர் தூக்கும்போது எண்ணெய் பிசுபிசுப்பு காரணமாக எம்.ஜி.ஆர் கைநழுவிவிடுகிறது. குண்டுமணி கீழே விழவிருப்பதை நொடி நேரத்தில் சுதாரித்த எம்.ஜி.ஆர், தன்னுடைய காலைக் கொடுத்து தடுக்க முற்படுகிறார். எம்.ஜி.ஆர் காலில் குண்டுமணி விழுந்ததால் எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டுவிடுகிறது.

 

கால் முறிந்துவிட்டது... எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பத்திரிகைகள் எல்லாம் எழுதத் தொடங்கிவிட்டன. அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தைத் திரும்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்தான் எம்.ஜி.ஆருக்கு வைத்தியம் பார்த்தார். பத்து நாட்களில் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். மூன்று மாதத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அளவிற்கு குணமடைந்துவிட்டார். குணமடைந்தவுடனேயே எம்.ஜி.ஆர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா... நேராக வாகினி ஸ்டூடியோ சென்று குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி ஒரு புகைப்படம் எடுத்தார். நான் குணமாகிவிட்டேன்... என்னால நடிக்க முடியாதுன்னு சொன்ன பத்திரிகைக்கு எல்லாம் இதை அனுப்பிவிடுங்கடா என்றார். அந்தப் புகைப்படமும் பிறகு பத்திரிகையில் வெளியாகி பெரிய அளவில் பிரபலமானது.  

 

வாகினி ஸ்டூடியோ வாசலில் குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு எம்.ஜி.ஆர் நிற்கையில், சாண்டோ சின்னப்பத்தேவர் தன்னுடைய படத்திற்காக பாடல் ரெக்கார்டிங் செய்துவிட்டு வெளியே வருகிறார். தேவரைப்  பார்த்ததும், ‘அண்ணே...’ என எம்.ஜி.ஆர் கூப்பிட, பதிலுக்கு ‘ஏ.. முருகா’ என வந்து எம்.ஜி.ஆரை தேவர் கட்டிப்பிடித்துவிடுகிறார். இருவரது கண்களுமே கலங்கிவிட்டன. ஏழு வருடங்களுக்குப் பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர். கால் முறிந்தது பற்றி தேவர் எம்.ஜி.ஆரிடம் கேட்க, தேவரின் படத்தயாரிப்பு குறித்து எம்.ஜி.ஆர் கேட்க என இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். தன்னுடைய படத்திற்காக பாடல் பதிவு வேலை நடப்பதாக எம்.ஜி.ஆரிடம் தேவர் கூறினார். நான் அந்தப் பாட்டைக் கேட்கலாமா என எம்.ஜி.ஆர் கேட்க, ‘உனக்கு இல்லாமலா முருகா...’ எனக் கூறி ஸ்டூடியோ உள்ளே அழைத்துச் சென்று, பதிவுசெய்த நான்கு பாடல்களையும் போட்டுக் காண்பிக்கிறார். பாடல்கள் அற்புதமாக உள்ளன எனப் பாராட்டிய எம்.ஜி.ஆர், ஹீரோ யார் என்று கேட்டுள்ளார். தனக்கு தொழில் தற்போது நலிவடைந்துவிட்டது என ஆதங்கப்பட்ட தேவர், கிடைக்குற நடிகர்களை வைத்து படம் எடுப்பதாகக் கூறியுள்ளார். ‘ஏன்... நான் இல்லையா’ என எம்.ஜி.ஆர் கேட்க, தேவர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

 

தேவரை கையோடு வீட்டிற்கு அழைத்துச்சென்ற எம்.ஜி.ஆர், தன்னுடைய அம்மா புகைப்படத்தின் முன் நிறுத்துகிறார். ‘சத்தியா அம்மா மேல சத்தியம்மா சொல்றேன்ணா... இனி வருஷத்துக்கு ரெண்டு படம் உங்களுக்கு நான் நடிச்சுக்கொடுக்கிறேன்... கதை, வசனம் எதுலயும் நான் தலையிடமாட்டேன்’ என சத்தியம் பண்ணிக் கொடுக்கிறார். அதேபோல, நான் தொழில்பண்ணுகிற இடத்தில் தம்பி இருக்கக் கூடாது... தம்பி என்று சிவாஜியை குறிப்பிடுகிறார். ‘நான் நடிக்கும்வரை சிவாஜியை வைத்து படம் எடுக்கமாட்டேன் என நீங்களும் சத்தியம் பண்ணிக்கொடுங்கள்’ என்கிறார். தேவரும் சத்தியம் பண்ணிக்கொடுக்கிறார். தேவர் மிகப்பெரிய சிவாஜி ரசிகர்; எம்.ஜி.ஆருக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக சிவாஜியை வைத்து அவர் படம் எடுக்கவேயில்லை. பண்ணிக்கொடுத்த சத்தியத்திற்காக எம்.ஜி.ஆரும் 16 படங்கள் நடித்துக்கொடுத்து தேவரை மிகப்பெரிய கோடீஸ்வரனாக்கினார்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.