Skip to main content

குண்டடிபட்டு சிகிச்சையில் எம்.ஜி.ஆர்... மருத்துவமனைக்கு பெரிய பண்டலுடன் வந்து நெகிழச் செய்த தேவர்

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆரை நெகிழச் செய்த சாண்டோ சின்னப்பத்தேவரின் செயல் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...   

 

எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதாவுக்கு இடையே இருந்த பிரச்சனை அனைவருக்கும் தெரிந்ததே. 'பெற்றால்தான் பிள்ளையா' பட நேரத்தில்தான் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எம்.ஆர்.ராதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர். ஒரு படத்தை முடிக்காமல் அடுத்த படத்தை தொடங்கமாட்டார். இதனால் 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர், எம்.ஆர்.ராதாவிடம் சென்று எம்.ஜி.ஆர். பற்றி குறை சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு கோபமான எம்.ஆர்.ராதா, நேராக வந்து எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டார். அப்போது எம்.ஆர்.ராதா குடித்திருந்தார். அவர் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சுட்டிருக்கமாட்டார்.

 

உடனே, எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும்போது வேறு நரம்பு எதையும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக சில காலம் கழித்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர். எம்.ஜி.ஆரால் பேசக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சாண்டோ சின்னப்பத்தேவர் கையில் பெரிய பண்டலுடன் மருத்துவமனைக்கு வந்தார். 

 

எடுத்துவந்த முருகன் விபூதியை எம்.ஜி.ஆர். நெற்றியில் பூசிவிட்டு, இந்தா முருகா உனக்கு அட்வான்ஸ் என்றார்.  எம்.ஜி.ஆருக்கு ஒரே குழப்பம். நாம் குணமடைவோமா என்று தெரியவில்லை, குணமடைந்தாலும் பேச்சு வருமா என்று தெரியவில்லை, இப்படி இருக்கும்போது அண்னன் வந்து அட்வான்ஸ் கொடுக்கிறாரோ என்று எம்.ஜி.ஆர். யோசித்தார். ஆனாலும், வாங்கிக்கோ முருகா என்று எம்.ஜி.ஆர். கையில் தேவர் கொடுத்துவிட்டார். இதற்கு காரணம், எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் இடையே இருந்த உயிரிலும் மேலான நட்புதான். இருவருமே ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

 

அந்த அட்வான்ஸ் தொகையை கையில் வாங்கியபோது எம்.ஜி.ஆர். அழுதுவிட்டாராம். ஏனென்றால், சினிமாத்துறையில் இது மாதிரி நடப்பதெல்லாம் அபூர்வம். நாடகத்தில் நடிக்கும்போது ஒருத்தரை தோளுக்கு மேல் தூக்கி நிறுத்த முயற்சித்ததில், எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. இந்த விஷயம் தெரிந்ததும், கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுங்கள் என்ற பல தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரிடம் வாங்கிவிட்டனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு மார்க்கெட்டே இல்லாமல் போனது. இதுதான் சினிமா. ஆனால், குண்டடிபட்டு பேச்சு வரவில்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியான போதும்கூட அட்வான்ஸ் கொடுத்து எம்.ஜி.ஆரை தேவர் புக் செய்தார். அதன் பிறகு, மருதமலைக்கு சென்று எம்.ஜி.ஆர். குணமாக வேண்டும் என்று தேவர் வேண்டினார். தேவரின் வேண்டுதலுக்குப் பிறகு நடந்த அதிசயத்தை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.