விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். ஆனால் 2020ஆம் ஆண்டு நடந்த திருமணத்திற்கு பிறகு பெரிய நடிகர்களோடு நடிக்கவில்லை. கமலுடன் நடித்த இந்தியன் 2 படத்திலும் இவரது போர்ஷன்கள் இடம் பெறவில்லை. பார்ட் 3-க்கான லீடில் மட்டும் இடம் பெற்றிருந்தார். அதனால் ‘இந்தியன் 3’ படத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தியில் சல்மான் கான் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் தோன்றியிருந்தார். பின்பு தெலுங்கில் ‘கண்ணப்பா’ படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றியிருந்தார். இப்போது பெரிய நிதிநிலையில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணா’ இந்தி படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சினிமாவை தாண்டி தனது குழந்தை மற்றும் கணவருடன் சமீபகாலமாக அதிக நேரம் செலவழித்து வந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் வதந்திகள் உலா வந்தது. இதனை தற்போது காஜல் அகர்வால் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பது, “எனக்கு விபத்து நடந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அதனால் அதை கேள்விப்படும் போது வேடிக்கையாக இருந்தது. கடவுளின் ஆசீர்வாதத்தால் நான் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறேன். அதனால் யாரும் இது போன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம். மேலும் இது போன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அதற்கு பதிலாக உண்மையிலும் பாசிட்டிவிட்டியிலும் கவனம் செலுத்தலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.