அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே திட்டம் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்கில் வெளியாவதே தற்போதைய சூழலில் சரியாக இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் எனக் காத்திருக்கிறோம். ஓ.டி.டி தளத்தில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். தமிழ்த் திரைப்படத் துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தது படக்குழு. மேலும், 'மாஸ்டர்' திரைப்படம் எப்போது, எதில் வெளியிடப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார். அதில், “மாஸ்டர் படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.