Skip to main content

'காளி' போஸ்டர் சர்ச்சை - இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யத் தடை 

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

kaali movie poster issue Ban on arrest of director Leena Manimegal

 

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை புதிதாக எடுத்து வரும் 'காளி' ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியைப் பிடித்தவாறு இருந்தது தொடர்பாக இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள், இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்   லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

 

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தன் மேல் பதியப்பட்ட வழக்கை எதிர்த்து லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் லுக்கோ நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் லீனா மணிமேகலையின் கோரிக்கையை ஏற்று அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மேல் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மீ டூ’ விவகாரம்; இயக்குநர் மீது லீனா மணிமேகலை பொய் குற்றச்சாட்டு - விசாரணையில் அம்பலம்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

leena manimekalai susi ganesan issue

 

பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ விவகாரம் கீழ், தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே லீனா மணிமேகலையின் புகாரை எதிர்த்து சுசி கணேசன் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். 

 

இதையடுத்து லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலை மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “தன் மீது பொய் புகார் கூறியுள்ளார். மேலும் சாதி மத மோதலை தூண்டும் விதமாகப் பேசி வருகிறார். இந்த குற்றச்சாட்டில் இருக்கும் உண்மையை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.  

 

அந்த புகார் தொடர்பாக லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது காவல்துறை. விசாரணையில் சுசீந்திரன் மீது லீனா மணிமேகலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரிய வந்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறும் சுசி கணேசனை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியும் புகாரை முடித்து வைத்தது காவல்துறை.

 

மேலும், காளி பட போஸ்டர் சர்ச்சையால் லீனா மணிமேகலை மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லீனா மணிமேகலை தற்போது கனடாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 


 

Next Story

பிரபல நடிகையுடன் கைகோர்க்கும் 'காளி' பட இயக்குநர் லீனா மணிமேகலை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

kaali movie director leena manimekalai next with actress parvathi

 

தமிழில் ‘மாடத்தி', 'செங்கடல்' மற்றும் பல ஆவணப் படங்களை இயக்கி பலரது கவனத்தை ஈர்த்தவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, விவாதத்திற்கும் உள்ளானது. 

 

காளி போஸ்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதனால் உடனடியாக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநருக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 1 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என  டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் லீனா மணிமேகலை அடுத்ததாக இயக்கும் படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை பார்வதி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு 'தன்யா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

ஏற்கனவ லீனா மணிமேகலையின் 'காளி' பட போஸ்டர் பெரும் சர்ச்சையானதால் அந்த வகையில் இப்படமும் ஏதாவது சர்ச்சையை உருவாக்குமா என்பது படத்தின் போஸ்டர் வெளியான பின்பே தெரிய வரும்.