Skip to main content

மும்பையைக் கலக்கிய 3 தமிழ் டான்கள்!

Published on 06/06/2018 | Edited on 08/06/2018

ஒருவழியாக நாளை வருகிறார் காலா சேட். ரஜினியின் அரசியல் அறிவிப்பு, தூத்துக்குடி பயணம், அதைத் தொடர்ந்த சர்ச்சை, பா.ரஞ்சித்தின் தொடர் அரசியல் செயல்பாடுகள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வருகிறது இவர்கள் கூட்டணியின் இரண்டாவது படம். படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் தலைவராக, நெல்லையைச் சேர்ந்தவராக ரஜினி இருக்கிறார். தமிழகத்திலிருந்து மும்பை சென்று அங்கு செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்ந்தவர்கள் மூவர். அவர்களில் ஒருவரது கதையாக இருக்கலாம் என்றும் பலர் கூறினர். அந்த மூவர் யார் என்பதை இங்கு பார்ப்போம். 'காலா' அவர்களில் ஒருவரா இல்லை முற்றிலும் வேறொருவரா என்பதை நாளை திரையில் பார்ப்போம்.
 

kaala rajini



கடந்த ஜூன் மாதம்  'காலா - கரிகாலன்' என்று  டைட்டிலுடன் ரஜினி ஜீப்பில் அமர்ந்திருக்கும்  ஃபர்ஸ்ட் லுக் வெளியான பொழுதே படத்தின் கதை பற்றி பல யூகங்கள் வந்தன. தமிழ்நாட்டிலிருந்து மும்பை சென்று, அங்கு பெரிய 'டானா'க உருவெடுத்தவர் பற்றிய கதை என அடிப்படையாய் சில தகவல்களை இயக்குனர் ரஞ்சித் கூற, அது மும்பை  தமிழ் நிழலுலக தாதா ஹாஜி மஸ்தானின்  கதை எனவும் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கு ஒரு பகுதி  தமிழர்களின் தலைவராகத் திகழ்ந்த திரவிய நாடார் என்பவரின் கதை எனவும் கூறப்பட்டது. உடனே இதன் எதிர்வினையாக, ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனாகிய சுந்தர் சேகர் என்பவர் ரஜினிகாந்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். "என் வளர்ப்புத் தந்தை ஹாஜி மஸ்தான் அவர்களைத் தவறாக சித்தரித்து படமெடுத்தால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என பேட்டியும் அளித்தார்.

 

 


திரவிய நாடாரின் மகள் விஜயலட்சுமி, "திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று தாதாவான ஒரே தமிழர் என் தந்தை தான். இது அவர் கதையாக இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்", என்று கூறியுள்ளார். படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், தன் 'வுண்டர்பார்' நிறுவனத்தின்  சார்பாக, 'காலா மும்பையில் நடப்பதாக எழுதப்பட்ட  ஒரு கற்பனை கதை. எந்த தனி மனிதரையும் குறிப்பிடுவதல்ல' என்று அறிக்கை வெளியிட்டார். அந்த பிரச்சனை முடியும் முன் அடுத்த பிரச்சனையாக, 'காலா- கரிகாலன் எனது கதை, 1995இல் நான் ரஜினியிடம் அவரது வீட்டில் வைத்து  இந்தக் கதையை கூறினேன். தலைப்பையும் பதிவு செய்துள்ளேன்' என்று திரையுலகைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் வழக்குத் தொடுக்க, பின்னர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 

 

haaji masthan



பிரச்சனைகளைத்  தவிர்ப்பதற்காக கற்பனை கதை என்று கூறப்பட்டு, பல உண்மை சம்பவங்களுடன் எடுக்கப்பட்ட பல படங்களை தமிழகம்  பார்த்துள்ளது.  காலா வந்தால் தான் தெரியும், அது கற்பனை கதையா, இல்லை உண்மைக் கதையா என்று. சரி, தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்குச் சென்று அங்கு பெரும்புள்ளியாக, டானாக மாறியவரின் உண்மைக்கதையைத் தழுவி 'நாயகன்' எடுக்கப்பட்டுவிட்டதே...அதன் பிறகும் 'காலா - கரிகாலன்' அப்படி சொல்லப்படுவதன் காரணத்தை ஆராய்ந்தால், 'நாயகனை'த் தவிர இன்னும் இருவரும் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று பெரும் புள்ளிகளாய் திகழ்ந்திருக்கிறார்கள். 'நாயகன்' கதை வரதராஜ முதலியாரின் கதையை சில இடங்களில் தழுவி எடுக்கப்பட்டது. வரதராஜ முதலியாரைத் தவிர ஹாஜி மஸ்தான், திரவிய நாடார் ஆகியவர்களும் இங்கிருந்து சென்று மும்பை நிழலுலகத்தில் முக்கிய புள்ளிகளாகினர்.

 

 


மஸ்தான் ஹைதர் மிர்சா, ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1926ஆம் ஆண்டு பிறந்து கடலூரில் சிறிது காலம் வாழ்ந்து, பின் பிழைப்பு தேடி தன் தந்தையுடன்  பம்பாய் சென்றார். சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்த அவர்களுக்கு வருமானம் பற்றாமல் போக, பம்பாய் துறைமுகத்தில் கூலி வேலை செய்யப் போனார். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் சின்ன சின்ன கடத்தல் வேலையில் ஈடுபட்டவர் மெல்ல வளர்ந்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்த  கரீம் லாலா என்பவருடன் இணைந்து பல பெரிய வேலைகளைச் செய்து பணம் சம்பாரிக்கத் தொடங்கினார். தங்கக் கடத்தலில் பணம் கொட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபட்டு விரைவில் பெரும் புள்ளியானார். வெள்ளை பென்ஸ் கார், வெள்ளை ஆடை, வெளிநாட்டு சிகரெட், என இவர் தான் மும்பையின் முதல் 'ஸ்டைலிஷ்' தாதா. பணப்புழக்கம் அதிகரிக்கவும், புதுப் பழக்கங்களும் அதிகரித்தன. இந்தி திரையுலகிலும் நுழைந்தார். படங்களுக்கு நிதியளித்தார், பின் தயாரிக்கவும் செய்தார். ராஜ் கபூர், திலீப் குமார், தர்மேந்திரா என பாலிவுட் பிரபலங்கள் இவரது நண்பர்களாகினர்.

 

 

varadharaja mudhaliyar



இவரது தொடர்புகள் வேறு தளங்களில் இருந்தாலும் மும்பையில் இருந்த தமிழர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தார். இன்னொரு  தமிழ் புள்ளியான  வரதராஜ முதலியரிடம்  மிகுந்த நட்புடன் இருந்தார். ஒரு கட்டத்தில், முதலியாரின் கூட்டாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, அவரும் சென்னைக்கு வந்து 1988இல் உயிரிழந்த பொழுது, அவரின் விருப்பப்படி, அவரது உடலைத்  தனி விமானத்தில் மும்பை கொண்டு சென்று அடக்கம் செய்தார் ஹாஜி மஸ்தான். அந்த அளவுக்கு நட்புடன் இருந்தனர் இவர்கள். 1984இல் 'தலித் முஸ்லீம் சுரக்ஷா மகா சங்' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். ஆண் வாரிசு இல்லாததால், சுந்தர் சேகர் என்பவரை தன் தத்துப் பிள்ளையாக வளர்த்தார். அவர்தான் இப்பொழுது ரஜினிக்கு நோட்டீஸ் விட்டவர். ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைத் தழுவி, இந்தியில் 'தீவார்' (Deewar), 'ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை' (Once upon a time in Mumbai) ஆகிய படங்கள் வந்தன.

 

thiraviya nadar



வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரிடமிருந்து சற்று மாறுபட்டவர் திரவிய நாடார். சின்ன வயதில் வறுமையினால் திருநெல்வேலியில் இருந்து பம்பாய் சென்றது, ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்தது என இவரது தொடக்க காலமும் அவர்களைப் போலவே இருந்தாலும், பின்னாட்களில், அவர்கள் அளவுக்கு பிரபலமான நிழலுலக மனிதராக இவர் திகழவில்லை. மாறாக தாராவி மக்களுக்கு அரணாய் அமைந்து, தமிழ்க் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றையும் காட்டியுள்ளார்.

 

 


திருநெல்வேலியில் இருந்து தன் பதினாறு வயதில் சென்னைக்கு சென்று, அங்கு தன் அண்ணன் ஏற்றுக்கொள்ளாததால், ரயிலேறி பம்பாய்க்கு சென்றார். கள்ளச்சாராயத்துக்குத் தேவைப்படும் வெல்லம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வளர்ந்ததால், 'ஃகூடு வாலா  சேட்' எனவும் அழைக்கப்பட்டாராம்.  ஒரு கட்டத்தில் கடத்தலில் இருந்து விலகி, காலியாக இருந்த நிலங்களைக் கைப்பற்றி கடைகள் கட்டியுள்ளார். அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். காமராஜரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துள்ளார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோருடனும் நல்ல உறவில் இருந்துள்ளார்.

'காலா'வில் ரஜினிகாந்தின் தோற்றமும், ட்ரைலரும் கதையைப் பற்றி  ரஞ்சித் கூறியிருக்கும் தகவல்களும் இந்த இருவரையுமே நினைவுபடுத்துகின்றன. அதைத் தாண்டி, பாடல்களையும் வசனங்களையும் பார்க்கும்பொழுது, மும்பை டான் என்ற கதையைத் தாண்டி படம் பல அரசியல் பேசும் என்பது உறுதியாகத் தெரிகிறது. அது ரஜினியின் அரசியலா ரஞ்சித்தின் அரசியலா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.  




  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.