Skip to main content

“என்னை இழுத்துவிட்டதற்கு நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்” -காலா நடிகை காட்டம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020
huma q

 

 

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக இந்தி நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக அவரது முன்னாள் இரண்டு மனைவிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

அனுராக் காஷ்யப் பிரபல பாலிவுட் இயக்குனர் ஆவார். சில தினங்களுக்கு முன்னாள் அவருக்கு எதிராக இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப்புடன் பணிபுரிந்த பெண் நடிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கேங்ஸ் ஆஃப் வஸிபூர் திரைப்படத்தில் அனுராக்குடன் பணியாற்றிய ஹுமா குரேஷி ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனுராக்கும் நானும் கடைசியாக 2012-13 ஆம் வருடம் பணியாற்றினோம். அவர் ஒரு நல்ல நண்பர். அற்புதமான திறமை கொண்ட இயக்குனர். தனிப்பட்ட முறையில் என்னிடமோ, நான் கேள்விப்பட்ட விதத்திலோ அவர் தவறாக நடந்து கொண்டதில்லை. ஆனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சொல்பவர்கள் காவல்துறை, நீதித்துறை என உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.

 

இதுவரை நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் எனக்கு சமூக ஊடகத்தில் நடக்கும் சண்டையிலோ, ஊடகங்களின் விசாரணையிலோ நம்பிக்கையில்லை. இந்த பிரச்சனையில் என்னை இழுத்துவிட்டதற்கு நான் கடும் கோபத்தில் இருக்கிறேன். மேலும், ஒரு பெண்ணின் இவ்வளவு வருட கடின உழைப்பும், போராட்டமும், ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டால் சிறுமைப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களிலிருந்து தள்ளியிருப்போம்.

 

மீடூ இயக்கத்தின் புனிதத்தை காப்பது, ஆண் மற்றும் பெண் என இரண்டு தரப்பின் கூட்டுப் பொறுப்பாகும், இதுதான் எனது இறுதி பதில். இதுபற்றி கருத்து கேட்க இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இது என் நண்பனுக்காக மட்டுமே" - பாலிவுட்டில் அறிமுகமான சிம்பு

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

double xl movie simbu make his debut in bollywood as singer

 

பாலிவுட்டில் ஹுமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் எக்ஸ்எல்' (Double XL). சத்ராம் ரமனி இயக்கியுள்ள இப்படத்தில் ஷிகர் தவான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார் உள்ளிட்ட 8 பேர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஜாகீர் இக்பால் மற்றும் தமிழ் நடிகர் மஹத் ராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மஹத் ராகவேந்தர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

 

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் 'தாலி தாலி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு பாடியுள்ள இப்பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் சிம்பு பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகிறார். மேலும், "இப்பாடலை தனது நண்பர் மஹத்திற்காக பாடியுள்ளதாகவும் அவரை நினைத்து பெருமை படுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த மஹத், "எனக்கு எப்போதும் முன்னோடியாக, வழிகாட்டியாக மற்றும் நல்ல நண்பராக இருந்துள்ளாய். என் இலக்கை அடைய உதவியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் இப்படத்தின் நாயகி ஹுமா குரேஷி சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு நன்றி. அவரது குரலைக் கொடுத்ததற்காகவும், டபுள் எக்ஸ்எல் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கும்" என குறிப்பிட்டுள்ளார். தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ள சிம்பு தற்போது இந்தியில் அறிமுகமாகியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.    

 

 


 

Next Story

கிரிக்கெட்டை தொடர்ந்து சினிமா - மகத்துடன் நடிக்கும் ஷிகர் தவான்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Shikhar Dhawan make a debut in bollywood movie double xl

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தற்போது இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே நடந்த டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் ஒரு நாள் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி கோப்பையை பெற்று கொடுத்தார் ஷிகர் தவான். 

 

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை தாண்டி தற்போது திரையுலகிலும் காலடி வைத்துள்ளார் ஷிகர் தவான். பாலிவுட்டில் ஹுமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் எக்ஸ்எல்' (Double XL) படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சத்ராம் ரமனி இயக்கியுள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்போது ஹுமா குரேஷியுடன் தவான் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட்டில் ஜொலித்த ஷிகர் தவான் திரையுலகிலும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.    

 

இது தொடர்பாக ஷிகர் தவான், "தேசத்திற்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரராக, வாழ்க்கை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். நல்ல பொழுதுபோக்குப் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் கதையைக் கேட்டதும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் இந்த சமுதாயத்திற்கு ஒரு அழகான செய்தியை சொல்லும். பல இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் கனவுகளை நோக்கி ஓட இப்படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன்" என பேசினார்.

 

இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார் உள்ளிட்ட 8 பேர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஜாகீர் இக்பால் மற்றும் தமிழில் மங்காத்தா, ஜில்லா படத்தில் நடித்து பிரபலமான மஹத் ராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.