மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா நடிப்பில் கடந்த 18ஆம் தேதி இந்தியில் வெளியான படம் ‘சயாரா’. யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மொத்தம் 7 பேர் இசையமைத்துள்ளனர். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இருவருமே அறிமுக நடிகர்களக இருந்தாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நலல் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 

ஒரு இசைக்கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் மியூசிக்கல் ரொமாண்டிக் ட்ராமா ஜானரில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு பாலிவுட் பிரபலங்களான அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், வருண் தவான், நடிகை ஷ்ரதா கபூர், ஆலியா பட் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மகேஷ் பாபு, ஜோதிகாவும் பாராட்டியுள்ளனர். ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஆக்‌ஷன் நிறைந்த படங்கள், ரத்தம் தெறிக்கும் படங்கள், கவர்ச்சி நடனம் உள்ள படங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் எமோஷனுடனும் இசையுடனும் தூய்மையான ரைட்டிங்குடனும் ஒரு பட வந்திருக்கிறது. அது உணர்ச்சிப்பூர்வமான தன்னலமற்ற உலகிற்கு நம்மை அழைத்து செல்கிறது. 

இந்த மனதை தொடும் கதை மற்றும் திரைக்கதை எழுதிய பிரதர், சங்கல்ப் சாதனாவை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த படம் பாலிவுட்டின் ஒரு சயாரா” எனக் குறிப்பிட்டு இயக்குநர் மற்றும் நாயகன் நாயகியை பாராட்டியுள்ளார். சயாரா என்றால் வானத்தில் இருக்கும் தனிமையான நட்சத்திரம் என்ற ரீதியில் படத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படம் ரூ.247 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.300 கோடியை நெருங்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புது முகம் நடித்த படம் இந்தியில் இவ்வளவு வசூலித்துள்ளது அங்கு சாதனையாக பார்க்கப்படுகிறது. ரூ.200 கோடியை கடந்ததன் மூலம் இந்தாண்டு அதிக வசூல் செய்த இந்தி படங்களில் இரண்டாம் இடத்தில் இப்படம் உள்ளது. முதல் இடத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா நடித்த ‘சாவா’ படம் உள்ளது. இப்படம் ரூ.600 கோடி வசூலித்தது