
2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில், சூர்யா தயாரித்து, ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை நேற்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர் பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி' படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் இப்படம் காமெடி படமாக உருவாகிறது. மேலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்தபடத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. இதனிடையே நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஆசிரியையாக நடித்த படத்தின் படபிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.