junior ntr helps andhra telungana flood affect

ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் இருக்கும் பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அமராவதி, விஜயவாடா, குண்டூர் உள்ளிட பல பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீரில் மூழ்கி இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அரசு முகாம் அமைத்து உதவி செய்து வருவதோடு ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதோடு நிவாரணம் வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அரசு மட்டுமின்றி தனியார் அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்து உதவி வருகின்றனர்.

junior ntr helps andhra telungana flood affect

Advertisment

அந்த வகையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஆந்திரப் பிரதேச முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியது. இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “சமீபத்தில் பெய்த கனமழையால் இரண்டு தெலுங்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் என்னை மிகவும் பாதித்தது. இந்த துயரத்தில் இருந்து தெலுங்கு மக்கள் விரைவில் மீண்டு வர அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் வெள்ளப் பேரிடர் நிவாரணத்திற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தலா 50 லட்சம் ரூபாய் நன்கொடையாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு எனது தரப்பில் அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.