Skip to main content

''வங்கிகளைப் போல் ஃபைனான்சியர்களும் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' - பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்   

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், 21 நாள் லாக்டவுன் நேரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்க நிலையைச் சீர்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி மக்கள் வங்கிகளில் வாங்கிய எந்தக் கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்டத் தேவையில்லை.அதேபோல வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடன் வசூலிப்பை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

 

gdgd

 

இதற்கிடையே தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. நடிகர்கள், தயாரிப்பாளர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் ஃபெப்சி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர்களுக்கும் கடன் வட்டி சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பைனான்சியர்கள் வட்டி தொகையினை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். அதில்...


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக ஒரு வேண்டுகோள் !


"அன்புடையீர் வணக்கம்,


கரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் பல்துறைகளும் முற்றிலும் முடங்கிக்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்தப் பணிகள் அப்படியே முடங்கிவிட்டது.படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த படங்கள், படப்படிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்ற படங்கள், பட வேலைகள் முடிந்து வெளியீட்டுத் தறுவாயில் இருந்த படங்கள் எனத் திட்டமிட்ட அனைத்து வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது. இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்காக ஒரு தாழ்மையான வேண்டுகோள்....
    

தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்கள், திரைக்கு வர இருக்கும் திரைப்படங்களின் கதாநாயகர், கதாநாயகி, இயக்குநர், இசையமைப்பாளர், கேமிராமேன், மற்றும் முக்கியமான டெக்னிஷியன்கள், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்திலிருந்து குறைந்த பட்சம் 30% சம்பளத்தை விட்டுக்கொடுத்து இந்தக் கடுமையான சூழலில் தயாரிப்பாளர்களுக்கு தோள்கொடுத்து பக்கபலமாக இருந்து உதவ வேண்டும். 

மத்திய, மாநில அரசுகள், மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் யாரும் 3 மாதங்கள் வட்டியோ, இ.எம்.ஐயோ வாங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கும், மற்ற நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.அந்த வகையில் திரைத்துறை பைனாஸ்சியர்களுக்கு ஒரு வேண்டுகோள்.தயாரிப்பாளர்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,இந்தக் காலச்சூழ்நிலை முற்றிலும் மாறி இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதாவது 2 மாதங்களோ, 3 மாதங்களோ அல்லது 4 மாதங்களோ அதுவரை வட்டி தொகையினை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகோளை வைக்கிறேன். அப்படிச் செய்யும் பட்சத்தில் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் சுமை, பயம் அகலும்.இயல்பு நிலை திரும்பியதும் நல்லமுறையில் படத்தினை முடித்து வெளியிட மிகப்பெரிய உதவியாக இருக்கும். 

 

இந்த ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கு இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு முன்னுரிமைக் கொடுத்து, உதவ வேண்டும் என்று தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்திற்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.சிறிய படங்கள் நிறைய திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, இயல்புநிலை திரும்பியதும் சிறிய பட்ஜெட் படங்கள், அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் என்று மாறி மாறி வெளியாகும் வகையில் காலச்சூழலை உருவாக்கி சிறு தயாரிப்பாளர்களை வாழ வைப்பதற்கு  தியேட்டர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் துணைநிற்க வேண்டும். இந்த வேண்டுகோள் அனைத்தும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் எண்ணம். அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்து வருகிறார்கள். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர்களின் மனநிலையை உணர்ந்து இங்கே பதிவு செய்கிறேன். இந்த வேண்டுகோள்களுக்கு தயவுகூர்ந்து சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்கள் செவிசாய்த்து தயாரிப்பாளர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்குமாறும், இந்த நேரத்தில் நாம் ஒருத்தருக்கொருத்தர் தோள்கொடுத்து, உறுதுணையாக இருந்து, இந்தச் சூழலை முற்றிலும் முறியடிக்க பக்கபலமாக இருந்து, உதவுமாறும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பில் மிக மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி! வணக்கம்.

இப்படிக்கு,
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்
தேசிய விருதுகள் பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்/நடிகர் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய இயக்குனர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! - பிரபல தயாரிப்பாளர் அழைப்பு!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

vgesg

 

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'பரதேசி' உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபலத் தயாரிப்பு நிறுவனம் ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஜே.எஸ்.கே சதிஷ் குமார் தன் நிறுவனம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் தான் தயாரிக்கும் அடுத்த படத்துக்கான இயக்குனர் தேடல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... 


"JSK FILM CORPORATION  நிறுவனம் இன்று 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய சிந்தனை, புதிய கோணம், புதிய பாதை என்று தனித்தன்மையுடன் செயல்பட்டு வித்தியாசமான கதைகளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் - வெளியிட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து 2 முறை பெருமைக்குரிய தேசிய விருதுகளையும், பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பெற்று மக்களின் நல் ஆதரவோடு இந்நிறுவனம் 15-வது வருடத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. 

 

10-க்கும் மேற்பட்ட புதிய இயக்குனர்களையும் 6-க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் எங்கள் நிறுவனம் சொந்தமாக நடத்திவரும் Youtube சேனலில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் subscriber-களாக இணைந்துள்ளனர். JSK AUDIO என்ற ஆடியோ நிறுவனமும் சொந்தமாக தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இத்தருணத்தில் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படமும், அருண்விஜய் நடப்பில் ‘வா டீல்’ திரைப்படமும் வெகு விரைவில் வெளியாகும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இந்த ஆண்டு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காக புதிய இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்பதற்குத் தயாராக உள்ளோம். புதிய இயக்குனர்கள் புதிய சிந்தனையுடன் வித்தியாசமான கதையம்சத்துடன் 9884318883 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், jskfilmcorp@yahoo.com என்ற இமெயில் ஐடி-யிலும் தொடர்பு கொள்ளலாம். எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகத் துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும் ரசிக பெருமக்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

 

Next Story

"மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு முக்கியக் கோரிக்கை..!'' - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் அறிக்கை!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

jgmngc

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமே பீதியில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கின்றனர். அதேபோல் தமிழகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் டாஸ்மாக் திறப்பது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,


''மே 7 டாஸ்மாக் திறப்பு... ஓர் இந்தியக் குடிமகனின் கோரிக்கை!

அனைவருக்கும் வணக்கம். நான் ஜே.எஸ்.கே. அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர்/ நடிகர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளர். தமிழ் வார இதழின் பதிப்பாளர்/ முதன்மை ஆசிரியர். இதையெல்லாம் தாண்டி நான் ஒரு இந்தியக் குடிமகன். இக்கடிதத்தின் மூலம் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கியக் கோரிக்கை... 

 

இன்று, கோவிட்- 19 என்கின்ற கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதற்கும் உலக வல்லரசுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் கடுமையான போராட்டத்தைக் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமியுடன் நடத்தி வருகின்றன. மக்களிடையே ஒரு பீதி பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில், நம் தமிழகத்தில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் உலக நாடுகள் போற்றும் அளவிற்குத் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் அரசுக்கு நிதி நெருக்கடி வரும், பொருளாதாரச் சிக்கல் ஏற்படும். அதை அறிந்து தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரையுலகினர், அரசு ஊழியர்கள், தனி மனிதர்கள் அவ்வளவு ஏன் சிறுவர், சிறுமியர்கள் கூட தங்கள் உண்டியல் சேமிப்புத் தொகையைப் பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் நிவாரண நிதிகளாக வழங்கி வருகின்றனர். இது பாராட்டத்தக்கது. அரசும் பாரபட்சமின்றி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றது. ஆயிரம் ரூபாய் பணம், இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், அம்மா உணவகத்தில் இலவச உணவு என அரசு ஒரு தாயின் கரங்களைப்போல் மக்களை அரவணைத்துக் கொள்கிறது. அதை மறுக்க முடியாது. 

 

அதே நேரத்தில், ஊரடங்கின் காரணமாக மூடிவைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை மீண்டும் மே 7 ஆம் தேதி முதல் திறக்கப் போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்குக் கள்ளச்சாராயம் பெருகிவருவது காரணமாகக் கூறப்படுகிறது. தவிர, அறியாமையில் பலர் கெமிக்கல்களைக் கலந்து குடிப்பது, அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் இங்கிருந்து பலர் அங்கு படையெடுப்பது போன்றவையும் நடக்கிறது. அதனால், இங்கேயே கடையைத் திறக்க அரசு முன் வந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு இந்தியக் குடிமகனாக எனக்கிருக்கும் அடிப்படை உரிமையில் ஒரு கோரிக்கையை, ஆதங்கத்தை முன் வைக்கிறேன். அதாவது, ‘நாடு இப்பொழுது இருக்கும் ஆபத்தான சூழலில், வயிற்றுக்கும், உயிருக்குமான போராட்டக் களத்தில், டாஸ்மாக்கிற்கு வந்து இவ்வளவு பணம் கொடுத்து மதுவை வாங்குபவர்களின் ஆதார் எண்ணை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும்’. அப்படி செய்வதன் மூலம், அவர்களுக்கு அரசாங்கம் அடிப்படை உதவியாகக் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், அம்மா உணவகத்தில் இலவச உணவு, இலவச கேஸ் மானியம் போன்றவற்றை ரத்து செய்யலாம். அவர்கள் பெயரைச் சலுகை தேவையற்றோர் பட்டியலில் சேர்க்கலாம். 

 

காரணம், அடிப்படை வசதிகள் தேவைப்படுவோர்கள் மத்தியில் மதுவுக்காக ஆடம்பரச் செலவு செய்யும் அளவிற்குப் பணம் இருப்பவர்களுக்கு அரசின் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படபோவதில்லை. அரசின் உதவிகள் தேவைப்படுவோருக்குப் போய்ச் சேரட்டும். இன்னொரு முக்கிய விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘வெறும் வசதியானவர்களும், மேல் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும்தான் குடிக்கிறார்களா? ஏழை, எளிய மக்கள் குடிப்பதில்லையா? அவர்கள் பாதிக்கப்படுவார்களே...?’ என்று கேட்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதின் மூலம் குடிப்பவர்கள் தாமாகவே குடும்பத்தின் பொருளாதார நலனைக் கருதி குடிப்பழக்கத்தை நிறுத்தக்கூடும். அவர்கள் வாழ்வு பொழிவுமிக்கதாக மாறும். அவர்கள் குடும்பம் அன்புசூழ் இல்லமாக மாறும். மக்கள் நலன் கருதி அரசு, மேற்கண்ட கருத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

இப்படிக்கு,
ஜே.எஸ்.கே. சதீஷ்குமார்