கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் போன்ற ஒரு முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் கடந்த 28ஆம் தேதி முடிந்துள்ளதாக படக்குழு இன்று தெரிவித்துள்ளது. மேலும் அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் அப்படியொரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டன.
இப்படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என்றார்.