Skip to main content

உருவாகிறது 'ஜிகிர்தண்டா 2' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

jigarthanda 2 confirms - karthik subbaraj announced

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'ஜிகிர்தண்டா'. கேங்ஸ்டர் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக படத்தின் வில்லன் கதாபாத்திரமான 'அசால்ட் சேது' கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்தது. ரஜினிகாந்த் கூட படக்குழுவினருக்கு அலைபேசியில் அழைத்து பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தை தன்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என கூறினார். மேலும் அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா வென்றார். தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் 'ஜிகிர்தண்டா' படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதை கொண்டாடும் வகையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஜிகிர்தண்டா படத்திற்கான இரண்டாம் பாகம் மற்றும் அதற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் 'ஜிகிர்தண்டா 2' படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகளை கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

கார்த்திக் சுப்புராஜ், 'மகான்' படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் 'ஆர்சி 15' படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத நல்லிணக்கம்; உண்மைச் சம்பவம்” - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
karthik subburaj praised aishwarya rajinikanth lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். 

இப்படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் பாராடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைவர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய்யாக பார்ப்பது சூப்பராக இருந்தது. நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படக்குழு சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனk குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“விஜயகாந்தின் அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்” - கார்த்திக் சுப்புராஜ்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
karthik subburaj about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் படம் எடுப்பதற்கு முன்னாடி குறும்படம் எடுத்திட்டிருந்த டைம், அவருடைய டிவியில் ஒரு குறும்பட போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு கண்டிப்பா நீ படம் பண்ணிடுவப்பா... என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதன் பிறகு அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்து வந்து இவ்ளோ பெரிய லெஜண்டா வந்திருக்காரு. அவருடைய இழப்பு சினிமா துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு” என்றார்.