jewellery theft in vijay yesudas home

Advertisment

தமிழில் 'தாஜ்மஹால் ஓவிய காதல்...' (கள்வனின் காதலி), 'நிலா நீ வானம் காற்று...' (பொக்கிஷம்), 'தாய் தின்ற மண்ணே...' (ஆயிரத்தில் ஒருவன்) என பல்வேறு ஹிட் பாடல்களை பாடியவர் விஜய் யேசுதாஸ். இவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தர்ஷா.தங்களது வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி லாக்கரில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை பார்த்ததாகவும் அதன் பின்னர் கடந்த 18ஆம் தேதி நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் புகாரளித்துள்ளார். மேலும் வீட்டில் பணிபுரியும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலும் இதே போன்று நகைகள் திருடு போனதாக புகார் அளித்திருந்த நிலையில் அவர் வீட்டில் வேலை செய்யும் ஈஸ்வரி என்ற பணிப்பெண்ணிடம் 100 சவரன் தங்க நகைகள்,30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் என ஏராளமான பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்திருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் யேசுதாஸும் புகார் அளித்துள்ளது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.