
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 'த்ரிஷ்யம் 2' தற்போது வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்று வருகிறது. இவ்வரவேற்பைக் கண்ட பிறமொழித் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படத்தை தங்கள் மொழியில் ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், 'த்ரிஷ்யம் 3' படம் எடுக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக இப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் பேசியபோது....
"இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் சரியாக எடுக்க நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக அதை உருவாக்குவேன். அப்படி உருவாக்கவில்லை என்றால் அது குற்றமாகிவிடும். 7 வருடங்களுக்கு முன்னால் 'த்ரிஷ்யம் 2' நடக்காது என்றேன். ஆனால், இப்போது நடந்துவிட்டது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. ஜார்ஜ் குட்டி என்றுமே விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த விதமான இடர் பக்கமும் அவர் போக முடியாது" எனக் கூறியுள்ளார்.
Follow Us