மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படம், இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் படப்பிடிப்பு நடத்திவந்த படக்குழு, தற்போது மத்தியப் பிரதேசத்தில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. இப்படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துவிட்டதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தலைமை பண்பும் கற்றலும் ஒன்றிற்கொன்று இன்றியமையாதது என்பார்கள். இந்தப் பிரம்மாண்ட படைப்பை இவ்வளவு துல்லியத்தோடு நீங்கள் முன்னெடுத்து, அதே நேரத்தில் சுற்றியிருப்பவர்களுக்கும் கற்றுக்கொடுத்ததைப் பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. உங்கள் ஆசீர்வாதம், உங்கள் நகைச்சுவை, உங்கள் அக்கறை, எல்லாவற்றிற்கும் மேலாக என்னை நம்பியதற்கு நன்றி சார். உங்களுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் தருணத்தை நான் மிஸ் செய்கிறேன். மீண்டும் உங்களுடன் இணைந்து வேலை செய்யும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்" என மணிரத்னத்தை பாராட்டி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.