Skip to main content

"இது யார் மியூசிக் என்று கேட்டார்... உண்மையை சொன்னதும் ஷாக்காகிவிட்டார்" - நடிகர் ஜெய் கிண்டல் 

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

Jai

 

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரபாண்டியபுரம்'. இசையமைப்பளாராக நடிகர் ஜெய் அறிமுகமாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

 

விழாவில் நடிகர் ஜெய் பேசுகையில், "2002ஆம் ஆண்டிலிருந்தே மியூசிக் கற்றுக்கொண்டு இருந்தாலும் படத்திற்கோ விளம்பரப் படத்திற்கோ இசையமைக்க எந்த முயற்சியும் எடுத்ததில்லை. முதன்முதலில் ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸுக்காக இசையமைத்தேன். அந்த இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வரும்போது நான் மியூசிக் போட்டுக்கொண்டு இருந்தேன். கதைச் சொல்லி முடித்துவிட்டு, வரும்போது ஒரு மியூசிக் கேட்டதே அது நீங்கதான் போட்டீங்களா என்றார். நான் அவரிடம் ஒரு பாடலை வாசித்துக் காட்டினேன். ரொம்ப நல்லா இருக்கு என்று கூறி எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.

 

பின், அந்த வெப் சீரிஸில் உள்ள ஒரு காதல் தோல்வி பாடலுக்கு இசையமைத்து தரமுடியுமா என்று கேட்டார். நான் இசையமைத்து தருகிறேன். நன்றாக இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறினேன். அது அவருக்கு பிடித்ததும் வெப் சீரிஸில் பயன்படுத்திக் கொண்டார். மிக்ஸிங்-க்காக அந்தப் பாடலை சுசீந்திரன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த சுசீந்திரன் சார், இது யாரு மியூசிக் என்று கேட்டார். நான்தான் இசையமைத்தேன் என்று கூறியதும் நீங்களா என்று ஷாக்காகிவிட்டார். 

 

மறுநாள் காரில் போகும்போது, நம்முடைய அடுத்த படத்திற்கு நீங்களே இசையமைக்கிறீங்களா என்று கேட்டார். கிண்டலுக்காக கேட்கிறார் என்று நினைத்து எதுவும் கேமரா இருக்கிறதா என்று சுற்றிச்சுற்றி பார்த்தேன். உண்மையிலேயே கேட்கிறார் என்று தெரிந்ததும், இல்ல சார்... படத்துக்கு இசையமைக்கிற அளவுக்கு என்னிடம் திறமையில்லை என்று கூறினேன். அப்படியெல்லாம் இல்லை சும்மா ஜாலியா பண்ணுங்க என்றார். அப்படித்தான் இந்தப் படத்திற்குள் நான் இசையமைப்பாளராக வந்தேன். இசையமைக்க இனி எந்த வாய்ப்பு வந்தாலும் சிறப்பாக இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்” - விஷ்ணு விஷால்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
vishnu vishal about his career and 15 years of  Vennila Kabadi Kuzhu

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. இதில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இமேஜின் கிரியேஷன் தயாரித்திருந்த இப்படத்திற்கு செல்வ கணேஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், 2019 ஆம் ஆண்டில் விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் வெளியானது. 

இந்த நிலையில் வென்ணிலா கபடி குழு வெளிவந்து இன்றுடன் 15 ஆண்டுகளைக் கடக்கிறது. இதையொட்டி சுசீந்திரன் கூறுகையில், “வெண்ணிலா கபாடி குழு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவானதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முதல் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆனந்துக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி” என்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஷ்ணு விஷால், “என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த என் இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். 

எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில் பாதிக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.

என் திரைப் பயணத்தின் இந்த 15வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி.! 'வாழ்க்கை உங்களைச் சோதிக்கும். உங்கள் திறமைக்குப் பல சவால்களைத் தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Next Story

நயன்தாரா, ஜெய் மீது வழக்கு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
case against nayanthara and jai in mumbai

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாத 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மாத 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இந்த நிலையில் மத உணர்வை புண்படுத்தும் விதமாக இப்படம் இருப்பதாக குறிப்பிட்டு மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக இருக்கிறது” என குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீஸார், நயன் தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.